அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களை பள்ளி கல்வித்துறை இயக்குநர் பாராட்டினார்.நாடு முழுவதும், 250க்கும் மேற்பட்ட கல்லுாரி,பல்கலைகள், பன்னாட்டு நிறுவன அதிகாரிகள் இணைந்துள்ள, ஏம்பிசாப்ட் நிறுவன இ-பாக்ஸ் திட்டத்தில், தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி நேற்று முன்தினம் முதல், 12 நாள் ஆன்லைன் பயிற்சி துவங்கியது. இதை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். மாநிலம் முழுவதும் இருந்தும், 2,400 கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர்கள் திறன் வளர்ப்பு பயிற்சியில் இணைந்துள்ளனர். இவர்களுக்கு தினமும் இரண்டு மணி நேரம் ஆன்லைன் மூலம் பயிற்சியும், ஐந்து மணி நேர செய்முறை பயிற்சியும் அளிக்கப்படுகிறது. முதல் நாள் பயிற்சியில் திறம்பட செயல்பட்ட, 226 ஆசிரியர்களுக்கு தமிழகபள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பாராட்டு தெரிவித்துள்ளார்.ஏம்பிசாப்ட் நிறுவனங்களின் சி.எல்.ஓ., பாலமுருகன் கூறுகையில், ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி மூலம் மாணவர்களிடம் தொழில்நுட்ப நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன் வளர்ப்பை அதிகரிக்கலாம். பயிற்சியில் பங்கேற்றுள்ள ஆசிரியர்களுக்கு இதன் அடிப்படையில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன, என்றார்.