புதுடெல்லி- அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதில் புதிய கிடுக்கி பிடியை மத்திய அரசு அறிவித்துள்ளது. ரூ.2 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமாக பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை உள்ளது. அதே நேரத்தில் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதில் வருமான வரி விலக்கும் உள்ளது. இந்த சூழலில் அரசியல் கட்சிகளுக்கு ரொக்கமாக பணம் நன்கொடை கொடுப்பதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தன. இந்த சூழலில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்த பட்ஜெட் உரையில் அரசியல் கட்சிகளுக்கு தனிநபரிடம் ரொக்கமாக ரூ.2 ஆயிரத்திற்கும் அதிகமாக நன்கொடை பெற தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அதற்கு அதிகமாக நன்கொடையை டிஜிட்டல் பரிவர்த்தனை, செக், டிடி போன்றவை மூலமாக மட்டுமே பரிவர்த்தனை செய்ய வேண்டும் என அறிவித்துள்ளார். இதன் மூலம் அரசியல் கட்சிகள் கணக்கில் வராமல் நன்கொடை பெறுவதில் கிடுக்கி பிடி போடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான சர்வே ஒன்றில் அரசியல் கட்சிகளின் கடந்த 11 ஆண்டு வருமானம் ரூ.11 ஆயிரம் கோடிக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் பெயர் தெரியாதவர்களிடம் இருந்து மட்டும் ரூ.7 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக நன்கொடை பெறப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.