ஒரு நாட்டின் தங்க இருப்பு அந்த நாட்டின் அரசு கஜானாவில் (ரிசர்வ் வங்கியில்) எவ்வளவு இருக்கிறது என்ற அளவீட்டின் அடிப்படையில்தான் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு வீட்டில், தங்கம் தங்க வேண்டுமானால், என்ன வகையான ஜாதக அமைப்பு இருக்கவேண்டுமென வாஸ்து ஜோதிட நிபுணர் எம்.எஸ்.ஆர்.மணிபாரதியைக் கேட்டோம்.
நேற்றைக்கும், இன்றைக்கும், ஏன்? என்றைக்கும் மாறாத மதிப்புமிக்க ஒரு பொருள் உண்டென்றால், அது தங்கமாகத்தான் இருந்து
வருகிறது. ‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்பார்கள். பெண்ணைக் கொடுப்பதாக இருந்தாலும், நமது வீட்டுக்கு மருமகளாக பெண்ணை எடுப்பதாக இருந்தாலும் பொன் நகைகளின் அடிப்படையில்தான் முடிவு செய்கின்றோம். இந்த அணுகுமுறை சரியோ தவறோ இதுதான் நடைமுறையில் இருந்து வருகின்றது.
தங்கமே தங்கம்
உலக அரங்கில் தங்க உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு தென் ஆப்பிரிக்கா. இயற்கையாகவே இங்கு தங்கம் அதிக அளவில் கிடைக்கிறது. இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் கோலார் பகுதியில் தங்கம் கிடைக்கிறது.
பத்து கிராம் சுத்த தங்கத்தில் (அதாவது 24 காரட் தங்கத்தில்) ஒரு கிராம் தாமிரம் கலந்து ஆபரணத் தங்கமாக மாற்றிடலாம். இதனைக் கொண்டு, பெண்களுக்கு பல நகைகளை செய்திடலாம்.
தங்க யோகம்
தங்கம் ஒருவர் இல்லத்தில் தங்க வேண்டுமானால், ஒருவரது ஜனன காலத்தில் என்ன வகையான யோகம் இருக்கவேண்டும் எனப் பார்ப்போம்.
ஜோதிட ரீதியாக குரு என்ற சொல்லப்படும் வியாழ பகவான்தான் தங்கத்தின் அதிபதியாகத் திகழ்கிறார். பொன்னன் என்ற பெயரும் இவருக்கு உண்டு. இவர் ஒருவரது ஜாதகத்தில் ஆட்சி, உச்சம், நட்பு, கேந்திரம் அல்லது திரிகோண அந்தஸ்தில் இருந்தால், இவர்களது வீட்டில் தங்கம் இருந்துகொண்டே இருக்கும்.
குருவானவர் சனி, சுக்கிரன், புதன் சாரம் பெற்று இருந்தாலும் தங்கம் வாங்கும் யோகம் உண்டு என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
ஜன்ம லக்னத்தில் இருந்து ஐந்தாம் வீட்டுக்கு அதிபதியானவர் குரு சாரம் பெற்றிருந்தாலும், 5-ம் வீட்டில் உள்ள கிரகம் 2-ம் வீட்டின் அதிபதியின் பார்வை பெற்றாலோ அல்லது 2-ம் வீட்டில் இருந்தாலோ அவர்கள் வாங்கும் நகைகள் அவர்கள் வீட்டில் லட்சுமி கடாட்சத்தைக் கொண்டு வரும்.
ராகுவும், சுக்கிரனும் நட்பு பெற்ற வீட்டில் இணைந்து இருந்தாலோ உபரி வருமானம் எனும் சேமிப்பு வருமானம் பெருகும். இப்படிப்பட்ட அமைப்பில் உள்ளவர்கள் சேமிப்புச் சீட்டில் சேர்ந்து அதன் மூலமாக நகை மற்றும் ஆபரணங்களைப் பெறும் யோகத்தைப் பெறுவார்கள்.
நாம் தங்கநகைகளைப் பல்வேறு நோக்கங்களுக்காக வாங்கிப் பயன்படுத்துவோம். வேறு தொழில் முதலீட்டுக்காக நகைகளை வங்கியில் வைப்பதாக இருந்தால், திங்கள், வியாழக்கிழமை நாட்கள் மிகவும் நன்று. மற்றவர்களிடம் பணம் புரட்டுவதாக இருந்தால், ஞாயிற்றுக்கிழமையில் நகை கொடுத்து பணம் பெறலாம். அப்படிச் செய்தால், உடனுக்குடன் சீக்கிரமாக நகையை மீட்டுவிட முடியும். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நகைகளை அடமானம் வைப்பதோ அல்லது விற்பதோ கூடாது.
கார்த்திகை, மகம், உத்திரம், சித்திரை, மூலம், ரேவதி இந்த நட்சத்திரங்கள் உள்ள நாட்களில் தங்க நகைகளை இரவல் கொடுப்பது கூடாது.
திருமகள் கொட்டும் பொற்காசுகள் உள்ள படத்தை எப்போதும் வீட்டில் வைத்து வழிபட்டு வந்தால் தங்கம் எப்போதும் தங்கும்.
நன்றி: ஆனந்த விகடன்.