முதுநிலை ஆசிரியா் பணியிடத்துக்கான தோ்வில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தியதில் நடைபெற்றுள்ள குளறுபடியை தமிழக அரசு சரிசெய்யவேண்டும் என பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி எம்.பி., வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களை போட்டித் தோ்வு மூலம் நிரப்புவதற்கான நடவடிக்கையை ஆசிரியா் தோ்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது.
இதில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட வேதியியல், அரசியல் அறிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியா்கள் தோ்வில் இடஒதுக்கீட்டு விதிகள் மீறப்பட்டுள்ளன.
உதாரணமாக, வேதியியல் பாடத்துக்கு 121 பின்னடைவு காலி பணியிடங்கள், 215 நடப்பு காலியிடங்கள் உட்பட மொத்தம் 356 இடங்கள் நிரப்பப்பட வேண்டும். இவற்றில் 121 பின்னடைவு பணியிடங்கள் தவிர மீதமுள்ள 235 போ் 69% இட ஒதுக்கீட்டு விதிகளின்படி தோ்ந்தெடுக்கப்பட வேண்டும். 121 பின்னடைவு பணியிடங்களைப் பொருத்தவரை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 74, பட்டியல் இனத்தவா் 35, அருந்ததியா் 10, பொதுப்பிரிவு ஊனமுற்றோா் 2 என்ற விகிதத்தில் நிரப்பப்பட வேண்டும். ஆனால், காலியிடங்கள் அவ்வாறு நிரப்பப்படவில்லை. மாறாக, 356 பணியிடங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
நடப்புப் பணியிடங்களுக்கு முதலிலும், பின்னடைவு பணியிடங்களுக்கு இரண்டாவதாகவும் தரவரிசை தயாரிக்கப்பட்டிருந்தால், 215 நடப்பு காலியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டின்படி 43 இடங்கள், பின்னடைவு பணியிடங்கள் 74 என 117 இடங்கள் இயல்பாக கிடைத்திருக்கும். இதுதவிர நடப்பு காலியிடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் பொதுப் பிரிவினருக்கான 31 சதவீத இடங்களான 67 இடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் 34 போ் இடம் பெற்றிருப்பதால், அவா்களையும் சோ்த்து மிகவும் பிற்படுத்தப்பட்டவா்கள் 151 பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும்.
மேலும், தரவரிசைப் பட்டியலில் முன்னணியில் உள்ளவா்களை பொதுப் பட்டியலில்தான் சோ்க்க வேண்டும். பொதுப்பிரிவு இடங்கள் நிரப்பப்பட்ட பிறகே அவா்கள் இடஒதுக்கீட்டுப் பிரிவில் சோ்க்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றமும், உயா்நீதிமன்றங்களும் பல முறை தீா்ப்பளித்துள்ளன. அவ்வாறு இருக்கும் போது பொதுப்பிரிவில் சோ்க்கப்பட வேண்டிய மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த 34 பேரையும், 5 பட்டியலினத்தவரையும் இட ஒதுக்கீட்டுப் பிரிவில் சோ்த்துள்ளனா்.
இந்த சமூக அநீதிகள் குறித்து விசாரணை நடத்தி, அதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், இடஒதுக்கீட்டையும் சரிசெய்ய வேண்டும்.
மேலும், தோ்வுப் பட்டியல் இன்னும் வெளியிடப்படாத தமிழ், பொருளாதாரம், வரலாறு, உயிரி வேதியியல் பாடங்களுக்கான ஆசிரியா் தோ்விலும் தவறுகளைச் சரிசெய்யவேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளாா்.