பொதுமக்கள் பயன்பாட்டில் இருக்கும் 10 ரூபாய் நாணயங்கள், பல இடங்களில் இனி செல்லுபடியாகாது என்று சிலர் வதந்தி பரப்பி வருவதால், தொடர்ந்து பலர் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாக புகார் எழுந்தது.
ஆனால், 10 ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகும் என்றும், இதனை வாங்க மறுப்பது குற்றம் என்றும் ரிசர்வ் வங்கி அவ்வப்போது அறிவித்து வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘புழக்கத்தில் இருக்கும் அனைத்து 10 ரூபாய் நாணயங்களும் செல்லும்; ரிசர்வ் வங்கி அறிவிப்பின்றி ஒரு நாணயத்தை செல்லாது என சொல்வதோ, வாங்க மறுப்பதோ குற்றம். ரிசர்வ் வங்கியின் 1906ம் வருடத்திய நாணயச் சட்டத்தின்படி, இந்தப் பத்து ரூபாய் நாணயம் செல்லத்தக்கது. இந்த நாணயத்தை முடக்குவது கண்டிக்கத்தக்கது. 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124 ஏ-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
