தனி நபர்களின் வருமான வரியைக் குறைப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கருத்தரங்கு ஒன்றில் நேற்று பங்கேற்று பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
முதல் காலாண்டில் 5 விழுக்காடாக இருந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி, இரண்டாவது காலாண்டில் 4 புள்ளி 5 விழுக்காடாக மேலும் சரிவடைந்திருப்பதாகவும், 3வது காலாண்டில் மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பொருளாதாரத்தை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டதை அவர் சுட்டிக் காட்டினார். பொதுத் துறை வங்கிகள் 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை கடனாக வழங்கியுள்ளதாகக் கூறிய அமைச்சர், இதனால் மக்களின் நுகர்வு சக்தி அதிகரிக்கும் என நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
பெரு நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டதும், தனி நபர் வருமான வரியும் குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் அதிகரித்துள்ளதாகக் கூறிய நிர்மலா சீதாராமன், இதுகுறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
