பி.எஸ்.என்.எல்., சிக்னல் கிடைக்காததால், மலை கிராம அரசு பள்ளிகளில், பயோ மெட்ரிக் முறையில் வருகை பதிவை உறுதி செய்வது கேள்விக்குறியாகி உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், அரசு மேல்நிலை, உயர்நிலை மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளின் வருகை பதிவை உறுதி செய்யும் வகையில், பயோ மெட்ரிக் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால், மலை கிராமங்களில், டவர் சிக்னல் கிடைக்காததால், இம்முறையில் வருகை பதிவை உறுதி செய்வது கேள்விக்குறியாகி உள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: காடட்டி, குஜ்ஜம்பாளையம், கேர்மாளம், மாக்கம்பாளையம், சுஜ்ஜில்கரை உள்ளிட்ட மலை கிராமங்களில் ஏழுக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் உள்ளன. இவற்றில், 50 ஆசிரியர்கள் வரை பணியாற்றுகின்றனர். பயோ மெட்ரிக் முறைக்காக, பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பி.எஸ்.என்.எல்., மட்டுமின்றி எந்த நிறுவனத்தின் டவர் சிக்னலும், இப்பகுதிகளில் கிடைப்பது இல்லை. இதனால் பயோ மெட்ரிக்கில் கைரேகையை வைத்து பயனில்லை. மாணவர் விபரங்களையும் தினமும் கல்வி துறைக்கு அனுப்ப வேண்டி உள்ளது. இதுபற்றி கல்வி துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது. இப்பிரச்னையால் ஆசிரியர், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.