திருப்பத்தூர் மாவட்டம், ப.முத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இடைநிலை ஆசிரியை பணியில் சேர்ந்தவர் முருகம்மாள். இவர் பிஎஸ்சி கணிதம், பிஎட் படித்ததாக கூறி சான்றிதழை கொடுத்திருந்தார். இந்த சான்றிதழ்கள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. ஆய்வின்போது இவை போலி என்பதும், போலி சான்று தயாரிக்க பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் உட்பட சிலர் உடந்தையாக இருந்ததும் தெரிந்தது. இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு புகார் அனுப்பினர். இந்த விசாரணை கடந்த மூன்று மாதமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் முருகம்மாளை தற்காலிக பணிநீக்கம் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார் அதன்பேரில் நேற்று முன்தினம் திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை, முருகம்மாளை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கிருஷ்ணகிரி,தளி அரசு மகளிர் பள்ளியில் முறையாக உணவு வழங்காத புகாரில் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விடுதி மாணவர்களுக்கு முறையாக உணவு வழங்காத புகாரில் தலைமை ஆசிரியை மகாதேவம்மாவை சஸ்பெண்ட் செய்துள்ளனர். மேலும் சரியாக பள்ளிக்கு வராத புகாரில் மதகொண்டப்பள்ளி அரசு பள்ளி ஆசிரியர் கனிகா ஜெசி கிறிஸ்டி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.