அன்னவாசல்,டிச.16:புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்தில் அன்னவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அரையாண்டு தேர்வு நடைபெறுவதை ஆய்வு செய்வதற்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி சென்றிருந்தார. அப்பொழுது பள்ளிவளாகத்தின் எதிரே உள்ள அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தில் ஊள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் செய்யும் அலுவலகம் உள்ளதை கண்டார். அப்பொழுது அவ்விடத்தில் வாகன போக்குவரத்து மற்றும் கூட்டம் அதிகமாக இருந்ததால் தனது வாகனத்தை விட்டு கீழே இறங்கி அங்கு தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் மாணவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் போக்குவரத்தை சரிசெய்து கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார். பின்னர் அவ்வழியே வந்த மாணவர்களை பாதுகாப்பான முறையில் சாலையை கடக்க வேண்டும் என அறிவுறுத்தி மாணவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் போக்குவரத்தை சரி செய்தார். இந்நிகழ்வை கண்ட பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமியை வெகுவாக பாராட்டினார்கள்.
பின்னர் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அரையாண்டுத் தேர்வு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து அங்குள்ள ஆசிரியர்களிடம் அறிவுரைகள், ஆலோசனைகளை வழங்கி சென்றார்.
