ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினம் என்ற பெயரில், பொய்யான தகவல்களை பரப்பி யாரேனும் மக்களை ஏமாற்ற முயன்றால் அவர்கள் மீது தகவல்தொழில்நுட்பச் சட்டம் பாயும் என்று மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே நாட்டில் கரோனா வைரஸ் பரவி வருவதால் மக்களிடையே அச்சம் நீடிக்கும் நிலையில் ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள் தினம் என்ற பெயரில் தவறான தகவல்களைப் பரப்பி மக்களை ஏமாற்றினால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சமூக வலைத்தளங்களை காவல்துறையினர் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர்.
இந்த அறிவிப்பு வெளியானதற்கு இடையே, மும்பையில் பாதுகாப்புப் பணிகளுக்காக ராணுவம் வரவழைக்கப்பட்டிருப்பதாக வாட்ஸ்ஆப்பில் தகவல் பரப்பிய ஒருவரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இது குறித்து அமைச்சர் அனில் தேஷ்முக் கூறியிருப்பதாவது, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ம் தேதி முட்டாள் தினமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த நாளில் மக்கள் நண்பர்கள், உறவினர்களை ஏதேனும் பொய் சொல்லி ஏமாற்றுவார்கள். ஆனால், இந்த ஆண்டு அதனை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஏற்கனவே இந்தியாவும் மகாராஷ்டிரமும் கரோனா வைரஸ் பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்புவதால் மக்கள் அச்சமடைய நேரிடும். எனவே, அதுபோன்று யாரேனும் தவறான தகவல்களை பரப்புவது தெரிய வந்தால் சைபர்க்ரைம் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, மக்கள் இந்த கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ள முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் என்று வலியுறுத்தியுள்ளார்.
