சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாததால், இந்த நோய்க்கிருமி பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் போராடிக்கொண்டு இருக்கின்றன. வல்லரசு நாடான அமெரிக்கா, கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறது. உலக அளவில் அமெரிக்கா தான், கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,837 ஆக உள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் ஏறத்தாழ 2 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் பலியாகியுள்ளனர். அதேபோல், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ருத்ர தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் படிப்படியாக தனது தாக்கத்தை அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால், அது மக்களுக்கு பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒவ்வொரு நாடும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் நோய்க்கிருமி பரவுவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியாததால் செய்வது அறியாமல் உலக நாடுகள் திகைத்து நிற்கின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 14.30 லட்சத்தை தாண்டியுள்ளது. இதேபோல் பலியானவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் சுமார் 8 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.
Source: Dinathanthi