‘கொரோனா தொற்றினால் மே, ஜூன் மாதங்களில் மிக மோசமான நிலை ஏற்படும். நாடு அதை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்,’ என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி தட்டுப்பாடு போன்ற பிரச்னைகளும் தலை விரித்தாடுகின்றன. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் கொரோனா நோயாளிகள் இறப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது நேற்று விசாரிக்கப்பட்டது. அப்போது, மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேதா ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் நீதிமன்றத்தில் கூறுகையில், ‘‘வரும் மே, ஜூன் மாதங்களில் கொரோனா பரவல் நாட்டில் மிக தீவிரமாகவும், மோசமாகவும் இருக்கும். இந்த மோசமான நிலையை சந்திக்க நாடு தயாராக இருக்க வேண்டும்,’’ என்றார். முன்னதாக நீதிபதிகள் கூறுகையில், ‘‘கான்பூர் ஐஐடி விஞ்ஞானிகளின் அறிக்கையின்படி, மே 2வது வாரத்தில் தொற்று பரவல் தீவிரமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
தற்போதைய பரவல் 2வது அலை அல்ல...
சுனாமி. இதை சந்திப்பதற்கான உள்கட்டமைப்பு, மருத்துவமனைகள், மருத்துவ அதிகாரிகள், ஊழியர்கள், மருந்துகள் போன்ற வசதிகளை ஏற்படுத்துவதில் மத்திய அரசு எந்தளவு தயாராக இருக்கிறது?’’ என்று கேள்வி எழுப்பினர். நீதிபதிகள் மேலும் கூறுகையில், `‘வரும் 26ம் தேதிக்குள் (நாளை) படுக்கை, ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், மருந்து, மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்ட மருத்துவ உள்கட்டமைப்பு குறித்து மத்திய, டெல்லி மாநில அரசு அறிக்கை சமர்பிக்க வேண்டும்,’’ உத்தரவிட்டனர்.
தடையாக இருப்பவரை தூக்கில் போடுவோம்...
டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏராளமான கொரோனா நோயாளிகள் இறந்து வருகின்றனர். இந்நிலையில், ஆக்சிஜன் தேவை தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த போது நீதிபதிகள், ‘‘ஆக்சிஜன் வழங்க, கொண்டு வர தடையாக இருப்பவரை யார் என்று சொல்லுங்கள் அவரை தூக்கில் போடுவோம். யாரையும் தப்பிக்க விட மாட்டோம். தடையாக இருக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது,’’ என்று ஆவேசத்துடன் கூறினர்.