t> கல்விச்சுடர் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் நூதன முறையில் கொள்ளை நடந்தது எப்படி? - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

23 June 2021

எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் நூதன முறையில் கொள்ளை நடந்தது எப்படி?


எஸ்.பி.ஐ ஏ.டி.எம் இயந்திரத்தை ஏமாற்றி ரூ.50 லட்சம் திருட்டு: யூடியூப் பார்த்து கொள்ளை - போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


சென்னை எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரங்களில் கைவரிசை காட்டி ரூபாய் 50 லட்சம் திருடப்பட்ட வழக்கில் கொள்ளையர்கள் யூடியூப் பார்த்து கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. 

சென்னையின் செனாய்நகர், வடபழனி, ராமாபுரம், தரமணி, விருகம்பாக்கம், கீழ்பாக்கம், பெரியமேடு உள்ளிட்ட 19 எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் நூதன முறையில் பணம் திருடப்பட்டுள்ளாதாக சென்னை போலீசாருக்கு புகார் வந்தது.  இதையடுத்து தனிப்படை அமைத்த சென்னை போலீசார் விரைவாக விசாரணையை தொடங்கினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

ஏடிஎம் மையத்தில் வாடிக்கையாளர்கள் பணம் டெப்பாசிட் வைக்கும் இயந்திரம் உள்ளதா என்று நோட்டம் விடும் கும்பல், பணம் டெபாசிட் இயந்திரத்தில் மட்டும் பணத்தை எடுக்கின்றனர்.

கார்டை நுழைத்து, ரகசிய எண்ணை பதிவு செய்து பணத்தை எடுக்கும் போது, குறிப்பிட்ட தொகை வெளியே வந்ததும் இயந்திரத்தில் பொறுத்தப்பட்டிருக்கும் ஷெட்டர் திறக்கும்.  வெளிவந்த பணத்தை வாடிக்கையாளர்கள் எடுக்கும் விதமாக 20 நொடிகள் அந்த ஷெட்டர் திறந்திருப்பது வழக்கம்.

20 நொடியை உறுதிப்படுத்த அந்த ஷெட்டரின் இடது பக்கத்தில் பொறுத்தப்பட்டிருக்கும் சென்சார் கருவி உதவி செய்யும். அதை கண்டுபிடித்த மோசடிக்கும்பல், பணம் வெளியே வந்தவுடன், திறக்கும் ஷெட்டரில் உள்ள சென்சார் கருவியை கை வைத்து மறைத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் பணத்தை எடுத்துள்ளனர்.

சென்சார் தகவல் துண்டிக்கப்பட்டதால், வெளிவந்த பணம் 20 நொடிக்குள் எடுக்கப்படவில்லை என்று ஏ.டி.எம் இயந்திரம் தவறாக நினைத்துக்கொண்டு, பரிமாற்றம் தோல்வி என பதிவு செய்துகொள்ளும். பணத்தை எடுப்பவர்களின் வங்கி கணக்கில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால், பணம் செலுத்தும் இயந்திரத்தில் வைக்கப்பட்டிருக்கும் பணம் திருடப்பட்டிருக்கும்.

பரிமாற்றம் தோல்வி என்பதால், பணம் எடுக்கப்பட்டதை ஏ.டி.எம் இயந்திரம் கண்டுகொள்வதில்லை. ஆனால், கணக்கில் குழப்பம் ஏற்பட்டதால் வங்கி அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளனர்.

விசாரணையில், ஒரே ஏ.டி.எம் கார்டு மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டதும் அதேபோல், ஒகேஐ என்ற நிறுவனம் தயாரித்த இயந்திரத்தில் மட்டுமே இந்த பரிமாற்றம் தோல்வி அதிக எண்ணிக்கையில் நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

எஸ்.பி.ஐ ஏடிஎம் இயந்திரத்தில் நானொன்றுக்கு ஒரு முறை 10 ஆயிரம் மட்டும் தான் ரொக்கம் எடுக்க முடியும். அதே நேரத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை தான் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முடியும். ஆனால் இவர்கள் சென்சார் கருவியில் கையை வைத்து செயல்படமால் செய்ததால் இவர்கள் எத்தனை முறை பணம் எடுத்தார்கள் என்பதை வங்கி நிர்வாகம் கணக்கில் கொள்ளவில்லை. இதை பயன்படுத்தி கொண்டு மீண்டும் மீண்டும் ஒரே ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தை எடுத்துள்ளனர்.

இந்த தொழில் நுட்ப கோளாரை பயன்படுத்திக்கொண்ட கும்பல், சென்னையில் மட்டும் 19 இடங்களிலும் இந்த கும்பல் கைவரிசை காட்டியுள்ளது.

அதிகபட்சமாக பெரியமேடு கேஷ் டெபாசிட் இயந்திரத்தில் மட்டும் 190 முறை ஏ.டி.எம் கார்டுகளை பயன்படுத்தி சுமார் 18,60,000 ஆயிரம் ரூபாய் நூதன முறையில் திருடப்பட்டுள்ளது.

வேளச்சேரி, பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் 50 முறை ஏடிஎம் கார்டை பயன்படுத்தி தலா 5 லட்சம் வரை திருடியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 24 ஏடிஎம் மையங்களில் நான்கு நாட்களில் 485 முறை இதுபோன்று நூதன திருட்டு அரங்கேறியுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தியதில் இந்த திருட்டு கும்பல் சென்னை, திருவல்லிக்கேணி அருகே இருசக்கர வாகனத்தை வாடகை எடுத்துக்கொண்டு சென்னை முழுவதும் தங்கள் கைவரிசையை காட்டியது தெரிந்தது.

இருசக்கர வாகனம் வாடகை எடுத்த இடத்தில் பதிவான செல்போன் எண்களை கொண்டு விசாரணை நடத்திய போலீசார் குறுப்பிட்ட எண் ஹரியானா மாநிலத்தில் மேவாட் மாவட்டத்தில் இருப்பதை உறுதி செய்தனர். அங்கு சென்ற தனிப்படை போலீசார் குற்றச்சம்வத்தில் ஈடுபட்ட ஒருவரை சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேலும் சிலர் இந்த திருட்டில் ஈடுப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

பிடிபட்டவரை டெல்லியில் வைத்து விசாரித்து வரும் தனிப்படை போலீசார், ஹரியானாவிலும் ஒரு தனிப்படையை அனுப்பி விசாரணையை தொடங்கியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் கொள்ளை கும்பல் யூடியூபை பார்த்து நூதன திருட்டை தொடங்கியதும் நாட்டில் ஏடிஎம் மையங்கள் அதிகம் உள்ள மாநிலங்களை தேர்ந்தெடுத்து அங்கு மட்டும் திருட்டை அரங்கேற்றியதும் தெரியவந்துள்ளது.

பெங்களூருவில் இருந்து கடந்த 17 ஆம் தேதி வந்த கும்பல் வரும் வழியில் ஓசூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலுர் என்று சென்னை வரும் வழிமுழுவதும் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளது தெரியவந்துள்ளது.



எஸ்பிஐ வங்கி பயன்படுத்து இத்தகைய டெபாசிட் இயந்திரங்கள் ஜப்பான் நாட்டின் ஒ.கே.ஐ என்ற நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள் ஆகும். இதில் உள்ள தொழில் நுட்ப தவறை தெரிந்து கொண்டு தான் கொள்ளையர்கள் திருட்டை செய்துள்ளனர்.

JOIN KALVICHUDAR CHANNEL