. -->

Now Online

FLASH NEWS


Thursday 10 June 2021

சளி, இருமல் மட்டுமல்ல ஏகப்பட்ட பயன்கள் கொண்ட மூலிகைச்செடி... உங்கள் வீட்டிலேயே வளர்க்கலாம்


ஒவ்வொரு வீட்டிலும் துளசிச் செடி இருக்க வேண்டியதன் முக்கியத்துவம்..


தாவர இயல் பெயர்: Ocimum tenuiflorum/ Ocimum sanctum

இதன் மறு பெயர்கள்: திருத்துளாய், துளவு, அரி, இராம துளசி, குல்லை, வனம், விருந்தம், துழாய்

வளரும் இடங்கள்: இந்தியா, இலங்கை உட்பட ஆசிய நாடுகள் பலவற்றிலும் 2000 மீட்டர் வரையில் கூட வளர்கிறது. மேலும், இது காட்டியல்பாகவும் வளர்கிறது. பயிரிடப்பட்டும் வளர்கிறது.

பயன் தரும் பகுதிகள்: இலை, விதை என துளசியின் அனைத்து பாகங்களுமே பயன் தரும் விதத்தில் அமைந்து உள்ளது.

பொதுவான தகவல்கள் : துளசி மூலிகை செடியாகும். இது இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. ஏறத்தாழ 50 சென்ரிமீட்டர் வரை வளரக் கூடிய இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இது கோயிற் பூசைகளில் குறிப்பாக பெருமாள் கோயில்களில் பயன்படுத்தப்படுவதால் கோயிற் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது. வீடுகளில் துளசியை வளர்த்து பூஜிக்கும் வழக்கமும் உண்டு.

நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்) , காடு துளசி என துளசியின் வகைகள் பல.

துளசியின் தாயகம் இந்தியா. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கும் பரவியுள்ளது. துளசியை விதை மற்றும் இளம் தண்டுக் குச்சிகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம். மண்ணில் கார அமில நிலை 6.5 - 7.5 வரை இருக்கலாம். வெப்பம் 25 டிகிரி முதல் 35 டிரிகி வரையில் இருக்கலாம்.

மருத்துவக் குணங்கள்:-

1. சளி இருமல், வறட்டு இருமல் போன்றவற்றுக்கும் மருந்தாகும்.

2. தொற்றுநோய்களை எதிர்க்கும்.

3. ஜீரண சக்தியை அதிகரித்து பசியை அதிகரிக்கும்

4. வயிற்றுப் பொருமலைத் தணிக்கும்

5. துளசிவிதை ஆண்மையை அதிகரிக்கும்

6. ஞாபக சக்தியை அதிகரிக்கும்

7. வெண்தோல், ஆஸ்துமா, மூச்சிறைப்பு, இடுப்புப்பிடிப்பு, சிறுநீரகப் பிரச்சினைகள் போன்றவற்றுக்கும் மருந்தாகும்.

8. மாதவிடாயின் முறையான சுழற்சிக்கும் இதனைப் பயன்படுத்தலாம்.

துளசியின் மகத்துவம்:-

துளசியின் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடி தான். அவரவர் வசதிக்கேற்ப சிறிய தொட்டியில் கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அதனை கவனமாக பராமரிப்பது அவசியம். எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம்.

1. துளசிச் செடியை தினமும் உட்கொண்டால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் தீரும்.

2. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம்.

3. உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி வராது தடுக்கலாம்.

4. உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும்.

5. தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும்.

6. சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

துளசியின் விரிவான மருத்துவப் பயன்கள்:

* துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு.

* துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும். பிள்ளைகளின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

* பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.

* துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும்.

* வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும்.

* வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.

* துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது.

* துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது. இதனை எளிமையான கருத்தடைச் சாதனமாகக் கொள்ளவும் ஏற்றது.

* தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு ஆண், பெண் இருவரும் துளசியைச் சாப்பிட்டு வந்தால் ஆறு மாதத்திற்குப் பின் கருத்தரிக்காது.

* துளசியில் இருபத்தி இரண்டு வகைகள் இருந்தாலும் நாம் அதிகமாக பயன்படுத்துவது 'இராம துளசியும்" ( இதனை வெண் துளசி என்று அழைப்பார்கள்), கிருஷ்ண துளசியும் (இதனை கறுப்புத் துளசி என்றும், நீலத் துளசி என்றும் அழைப்பார்கள்) தான். துளசியை பச்சையாக தின்ன இருமல், சளிக்கு நல்லது.

* துளசி இலைகளை சிறிது எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்துப் படர் தாமரைப் புண்களுக்குப் போட்டு வந்தால் குணமாகும்.

* அதிகாலையில் எழுந்து வெறும் வயிற்றில் இரண்டொரு துளசி இலைகளை மென்று விழுங்கி அரைத் தம்ளர் தண்ணீர் பருகி வந்தால் உடலில் தேவையற்ற விஷப் பொருள்கள் சேராது.

* துளசி விதைகளை பொடி செய்து தேனில் குழைத்துச் சாப்பிடலாம். அத்துடன் அவ்வாறு சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி கூட குணமாகும்.

* காலில் வீக்கம் ஏற்பட்டால் துளசியை அரைத்து வீக்கத்தில் தடவி வந்தால் வீக்கம் குறையும்.

* துளசி வேர்பட்டைத் தூளைச் சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு குணமாகும்.

* துளசி வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும். ஈரலில் உள்ள ஜீரண நீர்களை தூண்டி நஞ்சுகளை வெளியேற்றும். கெட்ட கொழுப்பை நீக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும்.

* துளசியில் பல் தேய்க்க, பல் வலி, பல் கூச்சம் ஆகியன போகும்.

* தேள் கொட்டியவுடன் சிறிது துளசியை எடுத்து கசக்கிக் கொண்டு வாயில் வைத்து நன்றாகத் தேய்க்கலாம். அத்துடன் ஒரு பிடி துளசியை வாயிலிட்டு நன்றாக மென்று விழுங்க, தேள் கடியால் ஏற்பட்ட கடுகடுப்பு உடனே குறையும்.

* தேள் கொட்டிய இடத்தில் துளசி இலைகளை உடனே தேய்த்து விட்டால் உடனே விஷம் இறங்கி விடும். தேள் கடிக்கு இது தான் முதல் உதவி. பிற்பாடு மருத்துவரிடம் அழைத்துச் செல்ல பெரிய பாதிப்புகள் இருக்காது.

* துளசி செடியை நன்கு நறுக்கி சிறிது மிளகுடன் கலந்து கசாயம் போட்டு காலை, இரவு குடித்துவந்தால் குளிர்காய்ச்சல், கோழை, இருமல், தொண்டை வறட்சி நீங்குகிறது.

* துளசி ரத்தத்தில் ஆக்ஸிஜனை அதிகரித்து செல்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். நரம்புகளை வலுவாக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். ஹார்மோன்களை சீராக்கும். தூக்கமின்மையை போக்கும். இதனால் இளமைத் துடிப்பும், இளமையும் துளசியால் பாதுகாக்கப்படுகிறது.

* துளசியின் பசுமையான இலையை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறப்போட்டு சில மணிநேரம் கழித்து அந்த தண்ணீரை குடித்துவர நாட்பட்ட வாயு, வயிற்று உப்பிசம் நீங்குகிறது.

* துளசி இலைச்சாறை 2-3 துளிகள் காதுக்குள் விட்டால் காதுவலி குறைகிறது.

* துளசி இலைச்சாறு சக்தி மிக்க கிருமி நாசினியாகவும், ரத்தத்தை சுத்தம் செய்து நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது. காற்றை சுத்தப்படுத்தி, சுவாசத்தை சீராக்கி சளித்தொல்லையை போக்கும். தினசரி 4 துளசி இலையை பறித்து சாப்பிட்டால் அதன்பலன் தெரியும். கிராமங்களில் இருப்பவர்கள் சளிப்பிடித்தாலோ, மூக்கு ஒழுகினாலோ துளசி இலையின் சாற்றை கொடுப்பார்கள்.

* ஒன்பது கருந்துளசி இலையை மென்று தின்று விட்டு ஒரு மூடி முற்றின தேங்காயை உடைத்து அதை மெதுவாக மென்று உண்டால் தேள் விஷம் முறியும்.

* கருந்துளசி இலையை சுத்தம் செய்து சாறு பிளிந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அஜீரணம், வயிற்று போக்கு குணமாகும்.

* ஈஸ்னோபிலியாவும், ஆஸ்துமாவும் வெவ்வேறு காரணங்களால் வரும் நோய்கள் என்றாலும் இரண்டும் சகோதர நோய்கள் என அழைக்கப்படுகிறது. இப்போது இந்நோய்கள் அநேகரிடம் காணப்படுகிறது.