. -->

Now Online

FLASH NEWS


Wednesday 28 July 2021

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப 48 சதவிகித பெற்றோர்களுக்கு விருப்பமில்லை: ஆய்வில் தகவல்


குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் வரை அவர்களை பள்ளிக்கு அனுப்ப 48 சதவிகித பெற்றோர்களுக்கு விருப்பமில்லை என்பது புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள 361 மாவட்டங்களில் 32,000 பெற்றோர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இதில், தங்களது மாவட்டத்தில் ஒருவருக்குக் கூட நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம் என 32 சதவிகித பெற்றோர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் வரை அவர்களை பள்ளிக்கு அனுப்ப விருப்பமில்லை என 48 சதவிகித பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பள்ளிகள் எப்போது திறந்தாலும் குழந்தைகளை அனுப்பத் தயார் என குறைந்தபட்சம் 21 சதவிகித பெற்றோர்களாவது கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வில் 47 சதவிகிதம் பேர் முதல் நிலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். 27 சதவிகிதத்தினர் 2-ம் நிலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். 26 சதவிகிதத்தினர் 3-ம் நிலை, 4-ம் நிலை மற்றும் கிராமப்புற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
கரோனா பெருந்தொற்று வந்ததிலிருந்து கடந்தாண்டு மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இணையவழியிலேயே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன. இரண்டாம் அலை வந்த பிறகு பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.
இதைத் தொடர்ந்து, குஜராஜ், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், ஹரியாணா, மத்தியப் பிரதேசம், பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த மாதம் பள்ளிகள் பகுதியளவு திறக்கப்பட்டன. ராஜஸ்தான், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.