ஆந்திரா மெஸ்க்கு பலர் சாப்பிட செல்ல காரணம் என்னவென்றால் அங்கு வழங்கப்படும் பொடி தான். இந்த பருப்புப் பொடியை சுடச்சுட சாதத்தில் நெய் விட்டுப் பிசைந்து சாப்பிட்டால் அதன் ருசியே தனி தான். அந்த அளவிற்கு ருசியான மற்றும் டேஸ்டியான ஆந்திரா மெஸ் பருப்பு பொடி எப்படி ஈஸியான முறையில் தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
ஆந்திரா மெஸ் பருப்பு பொடி செய்யத் தேவையான பொருட்கள்:
உளுந்தம் பருப்பு - 1 கப்
பூண்டு - 8 பல்
கறிவேப்பிலை - 1 கொத்து
காய்ந்த அல்லது சிவப்பு மிளகாய் - 12
(காரத்திற்கேற்ப)
மிளகு - 1 தேக்கரண்டி
பொட்டுக்கடலை - 1/2 கப்
பெருங்காயம் - 1 சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு.
நீங்கள் செய்ய வேண்டியவை:
முதலில் ஒரு பேன் அல்லது கடாய் எடுத்து அதில் உளுந்தம் பருப்பு, பூண்டு, கறிவேப்பிலை, காய்ந்த அல்லது சிவப்பு மிளகாய், மிளகு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வறுக்கவும்.
அவை நன்கு வறுபட்டு மணம் வருகையில் பொட்டுக்கடலை சேர்த்து வறுத்து கீழே இறக்கி வைத்து நன்கு ஆற விடவும்.
இதற்கிடையில், சிறிய துண்டு பெருங்காயத்தை எண்ணெய் விட்டு வதக்கி அவற்றோடு சேர்க்கவும். இவை நன்கு சூடு ஆறிய பிறகு ஒரு மிக்சியில் இட்டு பொடிபோல் நன்கு அரைத்து கொள்ளவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த ஆந்திரா மெஸ் ஸ்டைல் பருப்பு பொடி தயாராக இருக்கும். அவற்றை சூடான சாதத்தோடு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து ருசித்து மகிழவும்.
