கொள்ளுப் பொடி செய்முறை!
'இளைச்சவனுக்கு எள்ளு, கொளுத்தவனுக்கு கொள்ளு' என்பது நம் முன்னோர் வழங்கிய பழமொழி. அந்த வகையில் இன்று நாம் பார்க்கவுள்ள சூப்பர் ரெசிபி உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைந்து உடலை இளைக்க உதவும். தவிர சளித் தொல்லைகளுக்கு நிரந்தர தீர்வு கொடுக்கும்.
அப்படிப்பட்ட அற்புதமான கொள்ளு-வில் எப்படி சாதத்திற்கான பொடி செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1கப்
காய்ந்த மிளகாய் - 4
மிளகு - 1 டீ ஸ்பூன்
சீரகம் - 1/2 டீ ஸ்பூன்
கருவேப்பிலை (கொழுந்து) - சிறிதளவு
பெருங்காயம் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு.
நீங்கள் செய்ய வேண்டியவை:
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்காமல் கொள்ளு மட்டும் இட்டு வறுத்து எடுக்கவும்.
பொன்னிறமாக வறுபட்டதும் அவற்றை தனியாக வைத்துக்கொள்ளவும். பிறகு காய்ந்த மிளகாய், சீரகம், மிளகு ஆகியவற்றை வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பின்னர் கருவேப்பிலையை மட்டும் வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதன் பின்னர், பெருங்காயம் மற்றும் உப்பை தனியாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
இவை அனைத்தும் நன்றாக ஆறிய பின்னர் அவற்றை ஒரு மிக்ஸியில் போட்டு சிறிது நொறுநொறுப்பாக அரைத்துக்கொள்ளவும். இப்போது நீங்கள் எதிர்பார்த்த கொள்ளுப்பொடி தயாராக இருக்கும். இவற்றை சூடான சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெயுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு ருசிக்கலாம்.
