இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 14 சதவீதம் உயர்த்தி வரும் ஜன.,1-ம் தேதி முதல் 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக அரசுக்கு ஆண்டொன்றிற்கு தோராயமாக ரூ.8,724 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.
மேலும், பொங்கல் பரிசாக ‛சி’ மற்றும் ‛டி’ பிரிவு பணியாளர்களுக்கு ரூ.3 ஆயிரமும், ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 வழங்கிடவும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சிறப்பு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூ.500 வழங்கிடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக அரசுக்கு தோராயமாக ரூ.169.56 கோடி அளவிற்கு செலவினம் ஏற்படும். தமிழக அரசுக்கு நிதிச்சுமை உள்ள இந்த சூழ்நிலையிலும் இந்த உத்தரவுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.