உலகிலேயே மிகச் சிறந்த பாடத்திட்டமாக பொறியியல் பாடத்திட்டம் மாற்றப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கூறினார். வளரும் தொழில் நுட்பத்திற்கேற்ப பொறியியல் பாடத்திட்டத்தை மாற்றுவது குறித்த பயிலரங்கம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கல்வியாளர்கள், பேராசிரியர்கள், தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது: உலகிலேயே மிகச்சிறந்த பாடத்திட்டமாக பொறியியல் பாடத்திட்டம் மாற்றப்படும். தொழில் துறையில் 21 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்போது, அதற்கேற்ப மாணவர்களை உருவாக்க வேண்டும். படிக்கும்போதே வேலைவாய்ப்புக்கான பயிற்சியை மாணவர்கள் பெற வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் தொழிற்திறனை வளர்த்தெடுக்க பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டியது அவசியம் என்று முதல்வர் கூறியிருக்கிறார்.
அந்த வகையில், 25 ஆண்டுகளுக்குப் பின் அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டம் உலகத்தரத்துக்கேற்ப மாற்றப்பட உள்ளது. புதிய பாடத்திட்டம் தொடர்பான பயிற்சி முதலில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். வரும் கல்வி ஆண்டில் இருந்து புதிய பாடத்திட்டம் பின்பற்றப்படும் என்றார் அவர்.