திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மடத்துக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர் ரவிச்சந்திரன் (58). இவர் பட்டயத் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்று 29.2.2008ல் ஆசிரியராக நியமிக்கப்பட்டு 14 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 8 ஆண்டுகளாக கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மடத்துக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஆசிரியர்களின் பணி வரன்முறை மற்றும் தேர்வு நிலை குறித்து சான்றிதழ்களை சரி பார்க்கும் பணிகளை தமிழ்நாடு அரசு தேர்வு இயக்கக அதிகாரிகள் ஆய்வு செய்வது உண்டு.
அதன்படி மேற்கொண்ட ஆய்வில் ஆசிரியர் ரவிச்சந்திரனின் சான்றிதழ்களை சரிபார்த்ததில் இவரது பட்டயப் படிப்பிற்கான மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்களை மாற்றம் செய்து போலியான சான்றிதழை சமர்ப்பித்து அரசினை ஏமாற்றி சுயத் தேவைக்காக பணியில் சேர்ந்தது தெரியவந்தது.
இதனையடுத்து தமிழக அரசு தேர்வு இயக்கக அதிகாரிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமனுக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் திருவள்ளூர் மாவட்ட கல்வி அதிகாரி எல்லப்பன் கடம்பத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.