அன்பு மாணவனே அவனியில் ஆயிரம் பணிகள் உண்டு. ஆசிரியர் பணி வேண்டாம் இன்று.
அகிலத்தின் ஆதாரம் அது என்றும், ஆகாயம் போன்று அதிசயமானது என்றும், அன்னையாய் மதிப்பு மிக்கதென்றும், அனைவரும் வணங்கும் ஏற்றமானது என்றும், ஆயிரம் கதைகள் சொல்லுவர்.
அதை நம்பி ஏமாந்து விடாதே அதல பாதாளத்தில் விழுந்து விடாதே!
ஆதி பகவன் பிள்ளை சொன்னாலும் நம்பாதே!
ஆசிரியர் நான் சொல்கிறேன் வேண்டாம்.
ஆணவத்தின் அடையாளமாய் மாணவர்களும்
ஆணையிடும் அரக்கராய் அதிகார வர்க்கமும்
ஆட்டுவிக்கும் பெற்றோர் கூட்டமும்
ஆசிரியரை கேலிப் பொருளாக்கும்.
படியாத பிள்ளைக்கு பாடம் எடு
பண்பு இல்லாதவனிடம் பணிந்து போ !!
அடிதடி செய்பவனை அரவணைத்துச் செல் !
எழுதத் தெரியாதவனை எழுத்தாளர் என்று புகழ் !
ஆணவம் கொண்டவனிடம் அன்பு செலுத்து
இப்படித்தான் கல்வித் துறையும், கல்வி நிறுவனங்களும், கை விலங்கு போட்டு, உன்னை ஆசிரியனாய் அழகு பார்க்கும் .
உன்னை பாதுகாக்கவும் உன் உரிமைகளை உறுதிப்படுத்தவும் உனது உன்னதங்களை போற்றவும் ஒருவரும் முன்வர மாட்டார்கள்.
தவறிச் செய்த தவறையும், திருந்தக் கொடுத்த தண்டனையையும், கொடுங் கொலைக் குற்றமெனக் கருதி நீதிமன்றங்களும் ஊடகமும் ஓயாது ஒப்பாரி வைத்து, உன்னை ஒதுக்கி வைக்கும்.
ஓலமிட்டு அழச்செய்யும் உன்னை.
இனிய நிகழ்வுகளையும், இன்னல்களையும் எடுத்துரைக்க இன்றைய ஏடுகளுக்குப் பிடிக்காது.
இல்லாத பொய்களையும், நடவாத நிகழ்வுகளையும், இயல்புக்கு ஒப்பாமல் நிதம் ஒப்புவிப்பர்.
ஈசனுக்கு இணையானவன் என்று இணை வைத்தவனை,
ஈனப்பிறவி என்று எண்ணுமளவிற்கு ஈவு இரக்கமின்றி புணைந்து எழுதுவர்.
வள்ளுவன் வழி நீ நடந்தாலும்,
வம்பிற்கு வந்து நிற்பான் வழியில்.
தொல்காப்பியன் சொல்படி நீ நடந்தாலும்,
தொல்லை தருவதையே தயங்காமல் செய்வான்.
ஒழுக்க முடையவனாய் இரு என்றால் ஒப்பாரி வைப்பான்
கை ஓங்க நினைத்தாலே ஒழிக கோஷமிடுவான்.
ஊடகத்தை கூட்டி ஒப்பாரி வைப்பான்.
நடத்தையில் சந்தேகம் என்பான்.
நடந்ததைச் சொல்ல மாட்டான். அரசுப் பணியென்றாலும் அவதிகள் அதிகம் என்றாலும் சம்பளம் உண்டு.
தனியார் பணியென்றால் அனைத்துப் பணியாளனும் நீதான், ஊதியமா, மூச்சு விடலாம் பெரிதாக.
அன்புமானவனே ஆயிரம் வேலைகள் அவனியில் உண்டு.
அதில் ஒன்றை அடைந்திடு ஆனந்தமாய் வாழ்ந்திடு.
ஆசிரியர் பணி மட்டும் வேண்டாம்.
ஆயிரம் பணிகள் உண்டு அவனியில்.
- யாரோ ஒரு ஆசிரியர்