அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு நடந்த தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கடந்த 2003ம் ஆண்டு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. 2003 ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2003 ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு அரசுத் துறைகளில் நியமிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டமே பின்பற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த 2002ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாணையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடரும்படி உத்தரவிடக்கோரி சிவசக்தி உள்ளிட்ட 25 காவலர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 2002ம் ஆண்டு 3,500 காவலர்கள் தேர்வு செய்வது தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்த தேர்வு நடைமுறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2002ம் ஆண்டு தேர்வு நடைமுறைகள் தொடங்கியிருந்தாலும் 2003 நவம்பர் மாதம் தான் மனுதாரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய ஓய்வூதிய திட்டம்தான் அவர்களுக்கு பொருந்தும். பழைய ஓய்வூதிய திட்ட பலன்களை பெற அவர்களுக்கு தகுதியில்லை என்று வாதிட்டார்.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, 2002ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாணை மூலம் பெண் காவலர்கள் ஓராண்டிற்குள்ளாகவே பணி நியமனம் பெற்று பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பலன் பெறும் நிலையில், அதே காலகட்டத்தில் தேர்வு நடைமுறைகளை சந்தித்த ஆண் காவலர்களையும் சமமாக பாவிக்க வேண்டும். ஆண் காவலர்கள் நியமனத்திற்கு 11 மாதங்கள் தாமதமானத்திற்கு அவர்கள் காரணமல்ல என்பதால் அவர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும். இவர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கும் நடைமுறையை 12 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்....