. -->

Now Online

FLASH NEWS


Monday 22 May 2023

'பழைய ஓய்வூதியத் திட்டம் - இந்திய அரசின் குழுவைக் கைகாட்டும் தமிழ்நாட்டு நிதி அமைச்சர் பதில் ஏற்புடையதா? ஏமாற்றக் கூறியதா? ✍🏼செல்வ.ரஞ்சித் குமார்


'பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதியை நிறைவேற்றுவீரா?' என்றால் இந்திய அரசின் குழுவைக் கைகாட்டும் தமிழ்நாட்டு நிதி அமைச்சர்!

இப்பதில் ஏற்புடையதா? | ஏமாற்றக் கூறியதா?

✍🏼செல்வ.ரஞ்சித் குமார்


சற்றேறக்குறைய இணையத்தில் வெளியாகும் 99% ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் நேற்று (21.05.23) நீக்கமற நிறைந்திருந்த செய்தி என்றால், அது

*"பழைய ஓய்வூதிய திட்டம் வருமா? புதிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!"*

*"பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து தங்கம் தென்னரசு பதில்!"* என்பன உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் வெளியான செய்தி தான்.

மாண்புமிகு தமிழ்நாடு நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆங்கில செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கேட்கப்பட்ட ஒரு கேள்வியே மேற்படி தலைப்புகளுக்குக் காரணம். அப்பேட்டியில் செய்தியாளர் பின்வரும் கேள்வியைக் கேட்கிறார் :

*"மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று திமுகவின் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கு உங்களால் மதிப்பளிக்க இயலுமா. . .?"*

இந்தக் கேள்விக்கு மாண்புமிகு தமிழ்நாடு நிதியமைச்சர் அவர்கள், *". . . . பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து இந்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. பல்வேறு இயக்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. ஏற்ற நேரத்தில் முடிவு எடுக்கப்படும்."* என்று பதிலளித்துள்ளார்.

இங்கு கேள்வியே, 'உங்க கட்சி கொடுத்த வாக்குறுதிக்கு மதிப்பளித்து அதை நீங்கள் நிறைவேற்றுவீரா?' என்பதே. இதற்கு மாண்புமிகு தமிழ்நாடு நிதியமைச்சர் அவர்கள் அளித்துள்ள மேற்படி விடையானது பல்வேறு வினாக்களையும் ஐயங்களையும் CPS பாதிப்பாளர்கள் மத்தியில் எழுப்பி விட்டுள்ளது.

🧏‍♂️ ஒன்றிய அரசு என்ன முடிவு எடுக்கும் என்பதைப் பொறுத்துத்தான் திமுக தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று முன்னதாகக் கூறியிருந்ததா?

🧏‍♂️ ஒன்றிய அரசின் PFRDA எனும் ஓய்வூதிய ஒழுங்காற்று ஆணையத்தில் இதுவரை ஒப்பந்தம் செய்து கொள்ளாத தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசின் முடிவிற்குக் காத்திருக்க வேண்டுமா?

🧏‍♂️ தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள CPS-ற்கும் ஒன்றிய அரசு PFRDA மூலம் நடைமுறைப்படுத்தி வரும் NPS-ற்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை என்பது மாண்புமிகு நிதியமைச்சருக்குத் தெரியாதா?

🧏‍♂️ மாநில அரசின் அதிகார மட்டத்திற்குட்பட்ட கேள்விக்கு ஒன்றிய அரசை துணைக்கு அழைப்பது ஏன்?

🧏‍♂️ தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள CPS திட்டம் குறித்த போதுமான புரிதல் இல்லாமல் தான் மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் மேற்படி பதிலை அளித்தாரா?

🧏‍♂️ CPS & NPS குறித்து மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களுக்கு நன்கு தெரியுமெனில், திமுகவின் தேர்தல் வாக்குறுதியைக் கிடப்பில் போட ஒன்றிய அரசின் குழுவை கை காட்டுகிறாரா?

🧏‍♂️ அண்ணா தந்தது போல ஊக்க ஊதியம் தருவேன் என்று அளித்த வாக்குறுதியைப் பொய்யாக்கி, ஒன்றிய அரசைப் பின்பற்றி ஊக்கஊதியத்தைத் தடை செய்த திமுக அரசு, தற்போது ஓய்வூதியத்திற்கும் ஒன்றிய அரசின் முடிவை எதிர்நோக்கி இருப்பது மீண்டுமொரு வாக்குறுதியைப் பொய்யாக்கவா?

🧏‍♂️ மெய்யாகவே ஒன்றிய அரசு பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து குழு ஏதும் அமைத்துள்ளதா?

உண்மை நிலவரம் என்னவெனில்,

*இந்திய ஒன்றிய அரசு பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து எந்தவொரு குழுவையும் அமைக்கவே இல்லை.*

இறுதியாக, நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றிற்கு ஒன்றிய அரசு சார்பில் அளிக்கப்பட்ட பதிலிலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தும் எண்ணமே இல்லை என்றுதான் தெரிவிக்கப்பட்டது.

மேலும் 24.03.2023 அன்று மாண்புமிகு இந்திய ஒன்றிய நிதியமைச்சர் அறிவித்த அறிவிப்பின்படி, 06.04.2023-ல் தற்போது நடைமுறையில் உள்ள *NPS திட்டத்தில் ஓய்வூதியம் சார்ந்த சிக்கல்களைக் குறித்து ஆராய குழு அமைத்து இந்திய அரசின் நிதி அமைச்சக செலவுகள் துறை உத்தரவு* பிறப்பித்துள்ளது.

இக்குழு 100% NPS எனும் ஒன்றிய அரசின் தேசிய ஓய்வூதியத் திட்டம் குறித்த மீளாய்வுக் குழுதானே அன்றி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட குழு அல்ல.

மேலும், PFRDA-வுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளாத தமிழ்நாட்டு அரசின் CPS திட்டம் எந்தவகையிலும் NPS திட்ட சீரமைப்புகளின் கட்டுப்பாட்டிற்குள் வராது.

உதாரணமாக NPS-ல் அரசு 14% பங்களிக்கிறது. CPS-ல் அரசின் பங்களிப்பு 10% மட்டும் தான். NPS-ல் பணிக்கொடை எனும் Gratuity உண்டு. CPS-ல் இல்லை. NPS-ல் 40% தொகை பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டு அதில் இலாபம் வந்தால் ஓய்வூதியமாகக் கிடைக்கும். CPS-ல் பணி ஓய்விற்குப்பின் அரசுக்கும் ஊழியருக்கும் தொடர்பேயில்லை.

இவ்வாறாக, இதுவரை NPS-ல் நடைமுறையில் உள்ள எதையுமே பின்பற்றாத தமிழ்நாடு அரசின் CPS-ஐ ஒழிக்க. . . . மாநில நிதியமைச்சர் ஒன்றிய அரசின் NPS மீளாய்வுக் குழுவை (அதுவும் பழைய ஓய்வூதியத் திட்டம் சார்ந்த குழுவென) குறிப்பிட வேண்டிய தேவையே இல்லை. எனவே, செய்தியாளரின் கேள்விக்கு மாண்புமிகு தமிழ்நாடு நிதியமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் அளித்த பதில் அடிப்படையிலேயே முரணானது என்பதோடே துளியும் தொடர்பற்றதுமாகும்.

PFRDA-வுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட பல்வேறு மாநிலங்களில்கூட இன்று பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வந்துவிட்ட சூழலில், அதனுடன் ஒப்பந்தமிடாத தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசிற்கு எவ்வித பெரிய சிக்கலும் எழப்போவதில்லை.

கூடுதலாக, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக CPS-ல் உள்ள அரசின் பங்களிப்புத் தொகையான சுமார் 30,000 கோடி ரூபாய் மாநில அரசுக்கு உடனடி உபரி நிதியாகக் கிடைப்பதோடே, மாதந்தோறும் ஒதுக்கியாக வேண்டிய 10% பங்குத் தொகைச் சுமையும் அறவே நீங்கும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை ஊழியர் நலனில் அக்கறையுள்ளவரென மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் குறிப்பிடுவதாலோ, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் நிச்சயம் செய்வாரென ஆசிரியர் & அரசு ஊழியர் இயக்கங்கள் நம்பிக்கை தெரிவிப்பதாலோ கடந்த 24 மாதங்களில் மட்டுமில்லாது இனிவரும் ஒவ்வொரு மாதமும் இறக்கும் / ஓய்வுபெறும் ஊழியர்களுக்கோ அவர்தம் குடும்பத்தினருக்கோ எவ்வித நலனும் விளையப்போவதே இல்லை.

காலம் தாழ்ந்து வரப்போகும்
நீதி,
அதுவரை பணியில் தொடராதோர்க்கு
அநீதியே!

மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களின் இப்பேட்டி காலம் தாழ்ந்தாவது நீதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருப்போருக்கும் தற்போது அவர்தம் நம்பிக்கை மீதே பெருத்த ஐயத்தை விளையச் செய்துள்ளது என்பதே உண்மை.