நாலு காசு பாக்க
நாடு கடந்து வந்தவர்கள்
நமது நாடி பிடித்து
நரி வேடம் போட்டு
நப்பாசைக் காட்டி
நயவஞ்சகத்தில் வீழ்த்தி
அடுக்கு முறையில்
அடிமையாக்கிக் கிடத்தி
பலமாக இருந்தவர்களை
பலவீனப் படுத்தி
நலமாக வாழ்ந்தவர்களை
நலிவுற்றோராக்கி
வைர நெஞ்ச பூமியில்
பீரங்கியால் பீதி கிளப்பி
நாடு பிடித்து நாளும் நசுக்கும்
வெள்ளைத் தோல் விற்பன்னர்களை
நையப் புடைத்து
நாடு கடத்த
நாடே ஒன்று பட்டு
அகிம்சை எனும்
ஆயுதம் ஏந்தி
உண்ண மறந்து
உறக்கம் மறந்து
கொண்ட பொருளை
வாரி இறைத்து
உறவைத் துறந்து
நிறைவைக் காண
சிறை சென்று
வதை பல தின்று
உதை பட்டு
உயிரிழந்து
வாங்கிக் கொடுத்த
சுதந்திரம் இன்று
எப்படி இருக்கிறது
என்பதை சற்றே
ஒப்பிட்டுப் பார்க்க
உணர்வோடு அழைக்கிறேன்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
என்றார் வள்ளுவப் பெருந்தகை
ஆனால் இன்று…?
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்றார் கனியன் பூங்குன்றனார்
ஆனால் இன்று…?
சாதிகள் இல்லையடி பாப்பா
என்றார் பாரதியார்
ஆனால் இன்று… ?
சமத்துவமே சனநாயகம் என
முழங்கினார் பெரியார்
ஆனால் இன்று…?
உடல் மண்ணுக்கு
உயிர் தேசத்துக்கு என
எண்ணற்றோர் உயிர் துறந்த பூமியில்
இன்று…?
போதும் போதும் எனதன்பு
உறவுகளே !
இனி ஒரு விதி செய்வோம்
நாளை என்பது நாம் என
விடியட்டும்
நாம் என்பது
நமது மூச்சாக மாறட்டும்
வந்தே மாதரம்
நன்றி வணக்கம்
அனைவருக்கும் 77- ஆம் ஆண்டு சுதந்திர தின நல்வாழ்த்துகள்