நன்றி தி இந்து தமிழ்
ஆசிரியர்களுக்கு ஏற்படும் தொண்டை வலி, தொண்டைக் கட்டுதல்,
குரலில் மாற்றம் ஆகியவற்றுக்கான தீர்வு என்ன, டாக்டர்?
- சித்ரா ராஜகுமார், ராஜபாளையம்.
ஆசிரியர்கள் தொடர்ந்து பாடம் நடத்தும்போதும் அதிக சத்தத்தில்
பாடம் நடத்தும்போதும் இசை ஆசிரியர்கள் அடித்தொண்டையில்
பாடும்போதும் மூக்கு, வாய், தொண்டை ஆகிய பகுதிகளில் ஈரப்பதம் நீங்கிவிடுகிறது. இதனால், தொண்டை உலர்ந்து கண்ணுக்குத் தெரியாத
அளவில் அழற்சி அல்லது வெடிப்புகள் உண்டாகின்றன.
ஆசிரியர்களுக்கு இதனால்தான்
அடிக்கடி தொண்டைக் கட்டுதல், தொண்டை
வலி போன்றவை ஏற்படுகின்றன. இந்த அழற்சி குரல்நாண்களைப் பாதித்தால் குரலில் மாற்றம் ஏற்படுகிறது. தைராய்டு
பிரச்சினை, நீரிழிவு, சாக்பீஸ் ஒவ்வாமை, புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவை இருந்தால் தொண்டைக் கட்டுவது, கரகரப்பான குரல் ஆகியவை இயல்பாகி விடலாம். இரைப்பை உணவுக்குழாய் அமிலப் பின்னொழுக்கு நோய் (GERD) இருப்பவர்களுக்கு இம்மாதிரியான தொண்டைப் பிரச்சினைகள்
அடிக்கடி ஏற்படலாம். காரணம் தெரிந்து சிகிச்சை பெற்றால், இவற்றுக்குத் தீர்வு
கிடைக்கும். தினமும் தேவைக்குத் தண்ணீர் அருந்துவது, ஒவ்வொரு பாடவேளை முடிந்ததும் தண்ணீர் அருந்துவது, 200 மி.லி. இளம் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி உப்பு கலந்து தினமும் 3 முறை தொண்டையைக் கொப்பளிப்பது, நீராவி பிடிப்பது, ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 5 நிமிடங்கள் மௌனம் காப்பது (Voice Rest),
அழற்சி அமர்த்திகளை (Lozenges) வாய்க்குள் ஒதுக்குவது போன்ற முதலுதவி
முறைகளும் உதவும்.
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.