மகளிர் தினம்
********+*******
பெண்மையே …!
இது போதாதா காலம்
பசப்பு வார்த்தைகள்
படையெடுக்கும்
சொல்லெல்லாம் இனிக்கும்
பல்லெல்லாம் இளிக்கும்
உன்னில் இருக்கும்
உயர்வின் பிடியை
உடைத்திட ஓராயிரம்
சதிகள் நடக்கும்
நிமிர்ந்த நடையில்
நீ நகர்ந்தால்
பரிவுக் காட்ட
பரிதாபத் தோற்றம்
உன் இரக்கக் குணத்தை
குறி வைத்து நிற்கும்
காரணம்…
இரக்கக் குணம்
உனக்கான மணம்
அசந்து விடாதே
நிசத்தைக் கண்டு பிடி
வல்லமை மிக்க
உன் இரக்கக் குணத்தை
வரலாற்று காவியமாக்கு
காலிப்பயல்களின் மூஞ்சில்
கரியைப் பூச மறவாதே !
என்னுள் பயணிக்கும்
பாசப் பறவைகளுக்கு
மகளிர் தின வாழ்த்துகள்
படைப்பு ஆசிரியர் கோ. தெய்வநாயகம்
__________________________
உலக மகளிர் தினம்.
பெண்ணின்றி அமையாது உலகு
தாயாய் தமக்கையாய்
தாரமாய் மகளாய்
தோழியாய்
தூயதொரு வாழ்வின்
உறவுத் தையல்களாய்
நேசங்களாய் பிணைந்திணைத்து
நெகிழ்ந்துருகும் உள்ளங்கள்.
உடலுக்குள் உயிர்
சுமந்து
ஈரைந்து மாதத்தில்
உயிருவாய்ப் படைக்கின்ற
அருமைமிகு அன்னையர்கள்.
நுண்ணறிவில்
நூலறிவில்
முதல் வரிசை
பெற்றிங்கே
பகுத்தறிவுப் பாதையிலே
அடிவைத்துச் சாதிக்கும்
சாகசங்கள்.
மருத்துவராய் செவிலியராய்
கருணை உணர்வோடு
அருந் தொண்டாற்றுகின்ற
அன்னைதெரசாக்கள்
ஆணுக்குப்பெண்
இளைப்பில்லை என்று
கலைஅனைத்தும் கற்றறிந்து
தடம்பதித்து
மண்ணையும்
விண்ணையும் சாடுகின்ற
விண்மீன் தாரகைகள்.
வீட்டையும் நாட்டையும்
அன்பால் ஆளுகின்ற
ஏடகமும் ஊடகமும்
போற்றுகின்ற
ஈடு இணையில்லா
ஆளுமைகள்.
மண்ணில் உயிர்காக்கும்
நீராய்
கண்ணில்
விரியும்
இயற்கையின்
காட்சியாய்
விண்ணிருந்து
வீழும்
தங்கமழையாய்
மண்ணுலகம்
காக்கின்ற
பெண்ணின்று ஒருபோதும்
அமையாது உலகு.
பெண்ணின் பெருமைகளை
எட்டு திசையும் கொட்டி முழங்கட்டும் ...
பெண்களின் எழுச்சியால்
மகிழ்ச்சி பொங்கட்டும்...
அடுப்பு ஊதி அலுத்துப்
போனவர்கள்!..
உலகை ஆட்சி செய்யட்டும்....
படிப்பறிவை
முடக்கியோர்க்கு
எதிராய்
பெண்
சட்டங்களும், பட்டங்களும் பயிலட்டும்...
அச்சமும் மடமும் சொல்லி
அடக்கப்பட்ட வர்கள்
இன்று
வானையும் பூமியையும்
வட்டம் போடட்டும்..
நாளை உலகம் நமது ஆகட்டும்
இல்லை தோழி
இன்றே
அது உமது ஆகட்டும்..
வெல்லட்டும்
பெண்ணினம்!
அதை உலகம்
கை கொட்டி
சொல்லட்டும்!!!!
மகளிர் தின வாழ்த்துகள்
தோழமையுடன்
சீனி.சந்திரசேகரன்