தமிழகத்திலுள்ள 300-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் கடந்த 5 ஆண்டுகளாக மாணவர் தேர்ச்சி விகிதம் 50 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பது தெரியவந்திருக்கிறது.
இதற்கு, போதிய உள்கட்டமைப்பு வசதிகள், தகுதி வாய்ந்த பேராசிரியர்கள், ஆய்வக வசதி போன்றவை இல்லாததே முக்கியக் காரணங்கள். எனவே, பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்கள் இந்த விவரங்களை அறிந்து, பொறியியல் கல்லூரி குறித்து தீர ஆராய்ந்த பிறகே கலந்தாய்வில் இடங்களைத் தேர்வு செய்யவேண்டும் என எச்சரிக்கின்றனர் கல்வியாளர்கள். கல்லூரி முன்னாள் மாணவர்களிடம் விசாரிப்பது, கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களின் தகுதி உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளை மாணவர்களும், பெற்றோரும் தேர்வு செய்கின்றனர்.