t> கல்விச்சுடர் அங்கீகாரம் இல்லாத 700 பள்ளிகள் மீது நடவடிக்கை: பள்ளிக்கல்வித் துறை முடிவு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

18 May 2019

அங்கீகாரம் இல்லாத 700 பள்ளிகள் மீது நடவடிக்கை: பள்ளிக்கல்வித் துறை முடிவு


தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 700 பள்ளிகளை விரைவில் மூடுவதற்கு பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. வரும் கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்னதாக இந்தப் பள்ளிகள் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





தமிழகத்தில் 4,382 தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் எல்கேஜி முதல் ஆறாம் வகுப்பு வரை, எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை, எல்கேஜி முதல் 10-ஆம் வகுப்பு வரை என பல்வேறு பிரிவுகளில் இந்த பள்ளிகள் அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வருகின்றன.





அவற்றுக்கான அங்கீகாரத்தை பொருத்தவரையில் தொடர் அங்கீகாரம், ஆண்டுதோறும் புதுப்பிக்கும் அங்கீகாரம் என வழங்கப்பட்டு வருகின்றன.





அங்கீகாரத்துக்கான கால அவகாசம் முடியும் தேதியில் மீண்டும் அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும். சில பள்ளிகளுக்கான அங்கீகாரம் புதுப்பிக்கும் போது, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருக்கிறதா என்று ஆய்வு செய்யும் போது சில குறைபாடுகள் கண்டறியப்படுவதன் காரணமாக அங்கீகாரம் கிடைப்பதில் தாமதமாகிறது.





இதனால் அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வெழுத முடியாத நிலை ஏற்படுகிறது. அப்போது, அந்த மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.





இது போன்ற பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக அனைத்து வகை பள்ளிகளும் உரிய அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அதனடிப்படையில் தமிழகத்தில் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளும் மாநில அரசின் அங்கீகாரம் பெற வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை இயக்ககம் கடந்த ஏப்ரல் மாதம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. மேலும், அங்கீகாரம் பெறாமல் செயல்படும் பள்ளிகள் குறித்த பட்டியலும் கேட்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பள்ளிகள், தங்கள் பள்ளி வளாகங்களில் அங்கீகாரம் குறித்த தகவல்களை எழுதி வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





பள்ளிக்கல்வி இயக்குநரின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும், அங்கீகாரம் பெறாத பள்ளிகள் தொடர்பான விவரங்கள் பள்ளிக்கல்வித் துறைக்கு வந்து சேர்ந்துள்ளது. இதன்படி, திருப்பூர் 86, சேலம் 53, திருவள்ளூர் 48, சென்னை 7 உள்ளிட்ட 700 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவதாக, அந்தந்த மாவட்டங்களில் இருந்து தகவல் வந்துள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள பள்ளிகளை விரைவில் மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.





தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், மே 23-ஆம் தேதிக்கு பிறகு மேற்கண்ட 700 அங்கீகாரம் பெறாத பள்ளிகளை மூடுவதற்கு பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் இந்த பள்ளிகள் சீல் வைக்கப்பட்டு மூடப்பட உள்ளன. மேலும், அங்கீகாரம் பெறாமல் செயல்படும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ-மாணவியரை வேறு பள்ளிகளில் சேர்க்கவும் பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.




JOIN KALVICHUDAR CHANNEL