. -->

Now Online

FLASH NEWS


Tuesday 11 June 2019

அரசு உத்தரவால் மாற்று வேலை தேடும் ஆசிரியர்கள்



இந்தியா முழுவதும் இலவச கட்டாயக் கல்வியை நடைமுறைப்படுத்த அதிக ஆசிரியர்கள் தேவைப்பட்டனர். அதனால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களின் தரத்தை உறுதிப்படுத்த 2011-ம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வை (Teacher Eligibility Test) மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) நடத்தி வருகிறது.








இந்தத் தேர்வு தொடங்கப்பட்டது முதல் இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியராக பணியமர்த்தப்படுகின்றனர். இரண்டு தாள்களைக் கொண்ட இந்தத் தேர்வை ஆசிரியர் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டுமே எழுத முடியும். அதிலும் 1 முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புபவர்கள் முதல் தாளிலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புபவர்கள் இரண்டாம் தாளிலும் தேர்ச்சி பெற வேண்டும். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புபவர்கள் இரண்டு தாள்களிலும் தேர்ச்சி பெற வேண்டும். 




இந்தத் தேர்வு தொடங்கும்போதே அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி அக்டோபர் 2010-ம் ஆண்டுக்குப் பிறகு ஆசிரியராக நியமிக்கப்பட்டவர்களுக்கு 8 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படும். அதற்குள் அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தங்களின் பணியைத் தொடர முடியும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்தக் கால அவகாசம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்துவிட்டதால் 8 ஆண்டுகளாகத் தேர்ச்சி பெறாமல் உள்ள ஆசிரியர்களுக்குக் கடந்த இரண்டு மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது.


சென்னை, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் மட்டும் 1,500 ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்கப்படவில்லை. அவர்களுக்குச் சம்பளம் வழங்கக் கூடாது எனப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தற்போது அந்த ஆசிரியர்கள் வேறு பணியையும், தனியார் பள்ளியையும் நாடிச் செல்கின்றனர். 


அரசு ஆசிரியர் தேர்வாணையம்


இது பற்றி நம்மிடம் பேசிய பள்ளிக் கல்வி இயக்குநரக அதிகாரி ஒருவர், ``டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்கக் கூடாது என எங்களுக்குக் கண்டிப்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மார்ச் மாதத்துடன் அவர்களுக்கு வழங்கிய கால அவகாசம் முடிந்ததால் இரண்டு மாதம் சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. தற்போது நடைபெற்று முடிந்த டெட் தேர்வு முடிவுகள் வரும் வரை அவர்கள் பணியில் இருப்பார்கள். அதிலும் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவில்லையெனில் கட்டாயம் அவர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.