. -->

Now Online

FLASH NEWS


Thursday 27 June 2019

புதிய கல்விக் கொள்கையின் முக்கிய பரிந்துரைகள் என்னென்ன?


புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்துக்களை தெரிவிக்க ஜூன் 30ஆம் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.





5ஆம் வகுப்புவரை ஆங்கிலவழியை விட தாய்மொழி வழிக் கற்பித்தலை முன்னிலைப்படுத்த வேண்டும் என புதிய கல்விக் கொள்கை கூறியுள்ளது. தாய்மொழி, ஆங்கிலம் அல்லாத மூன்றாவது மொழியை கற்கும் மும்மொழிக் கொள்கையை 6ஆம் வகுப்பு முதல் அமல்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.











தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் உள்ளிட்ட பாரம்பரிய மொழிகளில் ஒன்றை இரண்டாண்டுகள் பயிலவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ஆண்டின் இறுதித் தேர்வாக அல்லாமல் பாடவாரியாக இரு முறை தேர்வு நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.





2020ஆம் ஆண்டிற்குள் தேசிய பாடத்திட்டத்தை மாற்றியமைக்க புதிய கல்விக் கொள்கை பரிந்துரைக்கிறது. மதிய உணவுத் திட்டத்தில் காலை சிற்றுண்டியாக வாழைப்பழம், பால் போன்றவற்றை வழங்கவும், பொதுவான நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி அதன் அடிப்படையில் உயர்கல்வி மாணவர் சேர்க்கையை நடத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மட்டுமின்றி ஓய்வுபெற்ற ஆர்வலர்கள், பள்ளிப் பகுதியில் இருப்போர் உள்ளிட்டோரை கற்பித்தல் பணியில் ஈடுபடுத்தவும் புதிய கல்விக் கொள்கை பரிந்துரைத்துள்ளது











அனைத்து விதமான ஆசிரியர் பணிக்கும் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட் படிப்பு நிர்ணயிக்கப்படும். ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டு ஆசிரியர் பணிக்கான படிப்புகள் இதர பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலேயே வழங்கப்படும். ஆசிரியர் நியமனத்திற்கு ஆசிரியர் தகுதித் தேர்வோடு சேர்த்து வகுப்பறை செயல்விளக்கமும், நேர்காணலும் அவசியம் எனக் கூறப்பட்டுள்ளது.











கிராமப்புறங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகையும், தங்கும் வசதியும் ஏற்படுத்தித் தர பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குடும்பக் காரணங்கள், பதவி உயர்வுத் தவிர இதர தேவைக்காக ஆசிரியர்களின் பணி மாறுதலை உடனடியாக நிறுத்திவிடவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.