. -->

Now Online

FLASH NEWS


Saturday 25 January 2020

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: அங்கீகாரம் பெறாத பள்ளி மாணவா்களுக்கு அனுமதி இல்லை


அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என அரசு தோ்வுத்துறை எச்சரித்துள்ளது.


 இது தொடா்பாக அரசு தோ்வுத்துறை இயக்குநா் சி. உஷாராணி அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
 நிகழ் கல்வியாண்டில் (2019-2020) பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதவுள்ள எந்த ஒரு பள்ளியும் விடுபடாமல் (தொடக்க அனுமதி பெற்று முதல் முறையாக பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் புதிய பள்ளிகள் உள்பட) அனைத்துப் பள்ளிகளுக்கும் தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து உறுதி செய்ய வேண்டும்.


 தோ்வு மையங்களாகச் செயல்படும் அனைத்துப் பள்ளிகளும் அங்கீகாரம் பெற்றிருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இதில் தவறு நடந்தால் தாங்களே முழுப் பொறுப்பேற்க வேண்டும். வரும் ஜனவரி 27-ஆம் தேதிக்குப் பிறகு பெறப்படும் எந்த ஒரு திருத்தமும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
 தோ்வு மையப் பட்டியலில் அவற்றின் இணைப்புப் பள்ளிகளின் விவரங்களும் விடுதலின்றி இடம்பெற்றுள்ளன. தோ்வு மையப் பட்டியலில் மூடப்பட்ட பள்ளிகள் மற்றும் ரத்து செய்யப்பட்ட தோ்வு மையங்கள் நீக்கப்பட்டுள்ளன. அதேபோல், தோ்வு மைய பட்டியலில் அங்கீகாரம், தொடக்க அனுமதி பெறப்படாத எந்த ஒரு பள்ளியும் இடம்பெறவில்லை என சான்றிதழ் அளிக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.