வளம் நிறைந்த நாடு என்று வந்து விட்டாய் நீ இங்கே
அன்னியர்கள் நுழைந்தது போல் நுழைந்து விட்டாய் நீ இங்கே
அன்றிருந்த நிலைபோன்று நினைத்து நீ வந்திருப்பாய்
இன்றிருக்கும் நிலை வேறு, நினைக்கின்றேன் புரிந்திருப்பாய்.
வந்தோரை வாழவைப்பார் என்றெண்ணி வந்திருப்பாய்
நொந்தவர்கள் உடலுக்குள் புகுந்து நீ நுழைந்திருப்பாய்
முட்டாள் நீ கொரானா, முட்டாள் நீ கொரானா
நல்லோரை மட்டும் தான் வாழ வைப்போம் உணர்ந்திருப்பாய்.
வேற்றுமைகள் பல இங்கே அறிந்து நீ வந்திருப்பாய்
வேறுபட்டு நிற்பார்கள் அழித்திடலாம் நினைத்திருப்பாய்
ஒன்று பட்டு நிற்பவரைக் கண்டு நீ விழித்திருப்பாய்
ஆங்காங்கே ஒன்றொன்று போதுமென்று முடித்துடுவாய்.
தேவையென்று வந்துவிட்டால் வேற்றுமையை மறப்பவர்கள்
தேவையின்றி வருபவரை ஒன்று பட்டு எதிர்ப்பவர்கள்
தேசபக்தி, தெய்வபக்தி இரண்டிலுமே உயர்ந்தவர்கள்
தனித்தனியாய் இருந்தாலும் ஒற்றுமையில் சிறந்தவர்கள்.
தனித்துவமாய்த் தெரிபவர்கள் என்றுமே இந்தியர்கள்
சித்தாந்தம், வேதாந்தம் இரண்டையுமே கற்றவர்கள்
உனக்கான சாவுமணி அடிப்பதிலே வல்லவர்கள்
அறிந்திருப்பாய் கொரானா வந்தவழி சென்றுவிடு.
எங்களை நீ வாழவிடு, உன் அழிவைத் தடுத்துவிடு
எங்கிருந்து வந்தாயோ அங்கேயே சென்று விடு
ஆடிவிட்ட ஆட்டமெல்லாம் போதுமென்று சென்றுவிடு
உன்னுடைய நன்மைக்காய்ச் சொல்கின்றேன் சென்றுவிடு.
உலக மக்கள் வாழவேண்டும் ஓரமாக ஒதுங்கி விடு
ஓரமாக ஒதுங்கி விடு, ஒதுங்கியபடி சென்று விடு.
*கிராத்தூரான்