. -->

Now Online

FLASH NEWS


Tuesday 17 March 2020

கொரோனா அச்சத்தால் எல்லோரும் மாஸ்க் அணிய தேவையில்லை - மத்திய சுகாதார துறை அறிவிப்பு


கொரோனா வைரஸ் பரவிவிடும் என்ற பயத்தினால் எல்லோரும் மாஸ்க் அணிய தேவையில்லை என்றும், குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்தால் மட்டுமே அணிய வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசு நேற்று முன்தினம் 15 அம்ச அறிவுரை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

கல்வி நிறுவனங்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்களை மூடுவது, பொதுமக்கள் தேவையில்லாமல் பஸ்கள், ரெயில்கள், விமானங்களில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவி வரும் பகுதிகளில் அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் (முக கவசம்) அணிந்து தான் வெளியே செல்ல வேண்டும் என்று பரவலாக மக்களிடையே அச்சம் நிலவுகிறது.

வைரஸ் பாதிப்பு இல்லாத பகுதிகளில்கூட பலர் மாஸ்க் அணிந்து செல்வதை பார்க்க முடிகிறது. சில இடங்களில் மாஸ்க் தட்டுப்பாடு உள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால், எல்லோரும் மாஸ்க் அணியத் தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை கூறி உள்ளது.

இது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மத்திய சுகாதாரத் துறையின் டுவிட்டர் பக்கத்தில் தெளிவான விளக்கப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், எல்லோரும் மாஸ்க் அணிய தேவையில்லை. இருமல், காய்ச்சல் அல்லது மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் மட்டுமே மாஸ்க் அணிய வேண்டும்.

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக சந்தேகிக்கப்பட்டாலோ, பாதிப்பு உறுதி செய்யப்பட்டாலோ மாஸ்க் அணிய வேண்டும். சுவாச பிரச்சினை உள்ள நோயாளிகளை கவனிக்கும் சுகாதார ஊழியர்கள் மாஸ்க் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இது தவிர மாஸ்க்கை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது விளக்கமாக கூறப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பான கூடுதல் தகவல்களை பெறுவதற்கு இலவச தொலைபேசி எண்ணையும் வெளியிட்டுள்ளது.