பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததை அடுத்து, ஜூன் 15க்குள் நிலைமை சீராகி விடுமா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு ஜூன் 1ம் தேதி நடக்கும் என தமிழக அரசு அறிவித்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. இதனை தொடர்ந்து தேர்வு தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., உடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர், ஜூன் 1ல் துவங்க இருந்த 10ம் வகுப்பு தேர்வு 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் காலத்தில் முறையான ஆலோசனையின்றி தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட 10ம் வகுப்பு தேர்வை, எதிர்ப்பு பலமானதும் ஜூன் 15க்கு தள்ளி வைத்துள்ளார்கள். இப்பொழுதும் குழப்பம்தான். அதற்குள் நிலைமை சீராகிவிடுமா மாணவரும், பெற்றோரும் பதறாத வகையில் தம் திட்டத்தை அறிவிக்க வேண்டியது அரசின் கடமை. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Source Dinamalar