. -->

Now Online

FLASH NEWS


Wednesday 3 June 2020

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாததால் கேரளாவில் மாணவி தற்கொலை


கேரளாவில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாததால் மன உளைச்சலுக்கு ஆளான 9ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கேரளாவில் பள்ளி மாணவர்களுக்காக ஜூன் 1ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியுள்ளன. 
தொலைக்காட்சி மூலமாகவும் பாடம் கற்பிக்கப்படுகிறது. ஆனால் அம்மாநிலத்தில் சுமார் 2.50 லட்சம் மாணவர்கள் தொலைக்காட்சி அல்லது இன்டர்நெட் வசதிகளை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றனர். 

இதற்காக மையங்களை ஏற்படுத்தி தருவதற்கு அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்நிலையில் மலப்புரம் மாவட்டத்தில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாததால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலப்புரம் மாவட்டம் வளஞ்சேரியில் சிறிய வீட்டில் கூலித் தொழிலாளியின் மகள் 9ம் வகுப்பு படித்து வருகிறார். ஆன்லைன் வகுப்பு தொடங்கிய போது தொலைக்காட்சியும் இல்லாமல், மொபைலும் இல்லாததால் வகுப்பை பார்க்க முடியாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த அவர் வீட்டில் இருந்து வெளியே சென்றிருக்கிறார். மகளை காணவில்லை என அவரது தந்தை தேடிய போது வீட்டுக்கு அருகே அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து அவரது தந்தை கூறுகையில், ‛எங்கள் வீட்டில் இருக்கும் டிவி பழுதடைந்துள்ளதால், அதனை ரிப்பேர் செய்து தருமாறு எனது மகள் என்னிடம் கூறினார். ஆனால் பழுது நீக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. எதற்காக உயிரை விட்டாள் என்று தெரியவில்லை. என்னிடம் சொல்லியிருந்தால், நண்பர் வீட்டிற்கு நான் அழைத்து சென்றிருப்பேன். அங்கிருந்து அவரால் பாடம் கற்றிருக்க முடியும், என்று தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி, அறிக்கை அளிக்க கல்வித்துறை அமைச்சர் ரவீந்திரநாத் உத்தரவிட்டுள்ளார்.