. -->

Now Online

FLASH NEWS


Thursday 9 January 2020

அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில் மீளாய்வு கூட்டம்: அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி

அரையாண்டு மதிப்பெண் குறித்து, மீளாய்வு கூட்டம் நடத்தி, தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்தனர்.தமிழகத்தில், 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கு, அரையாண்டு தேர்வு, டிச., 13 முதல், 23 வரை நடந்தது. விடுமுறை முடிந்து, தேர்தல் பணிக்கு பின், கடந்த, 6ல், பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில், அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில், பாடவாரியாக ஆசிரியர்களுக்கு மீளாய்வு கூட்டம் நடத்தி, மதிப்பெண் குறைந்ததற்கான காரணம், அதிகரிக்க செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து, பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, மீண்டும் நெருக்கடி ஏற்படுத்துவதால், ஆசிரியர்களிடையே அதிருப்தி உருவாகியுள்ளது.
இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: இரு ஆண்டுக்கு முன் வரை, பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம், அதிக மதிப்பெண் பெற வைக்க, தனியார் பள்ளிகள் போட்டிபோட்டு செயல்பட்டன. இத்துடன் ஒப்பிட்டு, அரசு பள்ளிகளிலும், தேர்ச்சி விகிதத்துக்கு நெருக்கடி தரப்பட்டது. இதனால், மாணவர்களிடையே மன அழுத்தம் அதிகரிப்பதால், பாடத்திட்ட முறை மாற்றியமைக்கப்பட்டது. பிளஸ் 1 பொதுத்தேர்வை முறையாக மாற்றியதோடு, வினாத்தாள் வடிவமைப்பு, சிந்திக்கும் திறனை வளர்க்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

இதில், தேர்ச்சி விகிதம் குறித்து கவலைப்பட வேண்டாம், மாணவர்களின் முன்னேற்றம் மட்டும் முக்கியம் என, கல்வித்துறை அறிவுறுத்தியது. தற்போது அரையாண்டு தேர்வு முடிவு அடிப்படையில், அந்தந்த பள்ளியில் மீளாய்வு கூட்டம் நடத்தி, தேர்ச்சி குறைந்த ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்க, பதிவேடுகளில் பதிய உத்தரவிடப்பட்டுள்ளது. இது ஒரு வகையில், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, ஆசிரியர்களுக்கு தரும் நெருக்கடியாகவே உள்ளது. இதனால், மீண்டும் மதிப்பெண்களை தேடி, ஓடும் நிலை உருவாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.