‘கொரோனா தாக்கப்பட்டதற்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகளாக, காய்ச்சல், இருமல், தொண்டையில் புண், கடுமையான தலைவலி போன்றவை காணப்படலாம். இந்த அறிகுறிகள் இருந்தால், உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும்,’ என்றுதான் இதுவரை கூறப்பட்டு வருகிறது. இப்போது, அமெரிக்க டாக்டர்கள் சங்கம், மேலும் சில ஆரம்பக்கட்ட அறிகுறிகளை கண்டுபிடித்து கூறியுள்ளது. இது குறித்து அமெரிக்க அகாடமியின் காது, மூக்கு, தொண்டை பிரிவு துணை தலைவர் ஜேம்ஸ் டென்னி, ‘ஹீலியோ பிரைமரி கேர்’ என்ற மருத்துவ இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘‘மணம், சுவை ஆகியவற்றை உணர முடியாமல் போவதற்கு ஜலதோஷம், அலர்ஜி, சைனஸ் பிரச்னைகள் முக்கிய காரணம்.
இவை இல்லாமல் ஒருவரால் மணம், சுவை ஆகியவற்றை உணர முடியவில்லை என்றால், அது கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம். அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும். கொரோனா நோயாளிகள் சிலருக்கு இந்த அறிகுறி ஆரம்பத்தில் உள்ளது. ஆனால், சிலருக்கு நோய் பாதிப்புக்கு பின்பு இந்த அறிகுறி ஏற்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை உலகம் முழுவதும் திரட்டி ஆராய வேண்டும்,’’ என்றார்.
Source: Dinakaran