நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக பீகார் மாநிலத்தில் இருக்கும் பல்கலைக்கழகம் ஒன்று மாணவர்களுக்கு நாளை வாட்ஸ்அப் மூலம் தேர்வுகளை நடத்தவிருக்கிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இதுபோன்ற முறையில் தேர்வுகளை நடத்துவதற்கு உயர் கல்வித் துறை எந்தவொரு வழிமுறையையும் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாளை மிட் செமஸ்டர் தேர்வு நடைபெறுகிறது. பி.காம் படிக்கும் மாணவர்களுக்கு பிடிஎஃப் வகையில் கேள்விகள் அனுப்பப்படும். மாணவர்கள் கேள்விகளுக்கு அதிலேயே பதில்களை எழுதி, மீண்டும் பிடிஎஃப் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
இது குறித்து கருத்து தெரிவித்த மாணவர் ஒருவர் "இந்த வகையில் தேர்வுகளை நடத்துவது முறையல்ல, மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தை வாட்ஸ்அப் பல்கலைக்கழகமாக மாற்ற, துணை வேந்தர் முயற்சிப்பதாக" பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருக்கிறார். மேலும் பீகாரில் சில கிராமங்களில் இணையதள வசதி சரியாக கிடைப்பதில்ல; அவர்களால் எப்படி இந்தத் தேர்வை எழுத முடியும் என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.