கொரோனா...
அணையா ஒளிவிளக்கு
அமைதி எங்கும்
அகல் விளக்காய்
தனியாய் ஒரு படுக்கை
தலை சாய்த்து என் கிடக்கை
பரபரப்பாய் மருத்துவர்கள்
பகலிரவு வைத்தியங்கள் ....
காய்ச்சல் சளி என்று
கடும் உளைச்சலில் என் உடம்பு
கண்மூடி ...
கரோனாவை புறந்தள்ளி...
கவலையாய் வந்தன
கடந்த கால நினைவலைகள்.
இயற்கை வளம் சார்ந்த. எளிமையான சிறுகிராமம்
இளமை பருவம் தொட்டு
இருமாப்பு என் சொத்து
கட்டளையா யார் சொன்னாலும் காலில் போட்டு மிதிக்க தோன்றும்
ஊர்வம்பு என்றால்
உவட்டாத செங்கரும்பு .
தீய பழக்கங்களை
திளைத்து அனுபவிப்பேன்.
பெற்றோர்கள் ...
எனது பல்கலை படிப்பிற்கு
பாடாய் பட்டார்கள் .
கடன் வாங்கி
கழனி வேலை பார்த்து
கல்லூரி படிக்கவைத்தார்கள்.
வேலை பார்த்தால் கூலி
வீட்டில் இருந்தால் வெறுங்கை.
கூலித் தொகை எல்லாம்.
காலியாய் போனது
கல்லூரி படிப்பிற்கு .
மூன்று வேளை
முழுக்க உண்ணாத
உத்தம பெற்றோர்கள் .
பத்தாம் வகுப்பை
பாதியில் முடித்துக் கொண்டாள்
பாசமுள்ள என் தங்கை
என் படிப்பிற்காக .
ஏழ்மை கவலை வறுமை
இதுதான் எங்கள் இல்ல சொத்து.
என் படிப்பு மட்டும் தான் அவர்களுக்கு
எல்லையில்லாத சொத்து.
அப்பாவி பெற்றோர்கள்
அழகான என் தங்கை
அனுதினமும் என் நினைப்பு அவர்களுக்கு.
கல்லூரி படிப்பை. கச்சிதமாய்முடித்துவிட்டு
கணினி பொறியாளனாய். கம்பெனியில் வேலைக்கு. . அமர்ந்தேன்.
பத்து மாதங்கள்
பரவசமாய் ஓடின .
தங்கைக்கு கல்யாணம்
தகுந்த நாள் குறித்து ஆகிவிட்டது.
தாய் தந்தைக்கும்
தாளாத மகிழ்ச்சி .
விழா ஏற்பாடுகள்
விரைந்து நடக்கிறது .
சில தினங்களுக்கு முன்
செய்தித்தாள்
தொலைக்காட்சி
வாடாத வாட்ஸ்அப்
வதங்காத பேஸ்புக் என
அனைத்திலுமே
கொரோனா கொரோனா....
எரிச்சலாய்இருந்தது
தனித்திரு விழித்திரு வீட்டில் இரு இவையெல்லாம்
வீண் என்று தோன்றியது.
பித்தலாட்டக்காரர்களின் பிதற்றல் என தோன்றியது.
எதிர்மறை எண்ணங்கள்
எக்காலமிட்டது
அதனால்
வலிந்து போய்
பேசாத நண்பர்களிடம்.
கைகுலுக்கிப்பேசினேன்.
தெருத்தெருவாய் சுற்றினேன். தேடித்தேடி சந்தித்தேன்.
கூடியிருந்து குலாவிப் பேசினேன்.
தனிமை என்றும்
தணலாய் கருகியது .
முகமூடி அணிந்தவர்கள் முட்டாளாய் தோன்றியது .
ஊரடங்கு உத்தரவு என்றதும்
எகிரி குதித்தது எனதுள்ளம்.
சில நாட்களில் ..
அடங்கிப்போனது
அடங்க மறுத்த
என்னை
அடங்கு என்றது கொரோனா.
சோதனை முடிவுகள்
வேதனைக்கு உள்ளாக்கியது.
மடக்கு கட்டிலில் மருத்துவமனைக்குள் சுருண்டேன்.
இன்னும் சில மணித்துளிகள்
இறுகுகிறது என் மனம் .
மங்குகிறது என் கண்கள்
மறுக்கிறது சவாசிக்க.
விளங்காத எனக்கு
வென்டிலேட்டரும் உதவவில்லை.
கண்களில் சிறுதுளி
கசிந்து உதிர்கிறது.
எனது
அப்பாவும் அம்மாவும் தங்கையும் எனக்காக உழைத்த வியர்வைத்துளிகள் இவை.
கடைசியாக ஒருமுறை
கண்ணால் காண துடிக்கிறது
எனது அன்பு உள்ளங்களை.
அருகில் இருப்பவரிடம்
அழுதழுது கெஞ்சுகிறேன்.
ஆனாலும்
அனுமதி மறுக்கப்படுகிறது.
ஆவலும் அடங்குகிறது.
வெறுமையான உலகம்
கருமையாக மாறுகிறது...
கொரோனா கொடியது.
சுந்தை.இராம.சரவணன்.
இராம.சரவணன்
தலைமைஆசிரியர்
(ஓய்வு)
2200A பாலாஜி நகர்
மச்சுவாடி
புதுக்கோட்டை