பள்ளிகள் திறப்பது குறித்து பொதுமக்கள் தெரிவிக்க கருத்து கேட்பு கூட்டத்தில் பெறப்பட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அல்லது நாளை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதையடுத்து, தற்போது பள்ளிகளை திறப்பது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதையடுத்து, பள்ளிகளை திறக்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது.
அந்த கருத்தின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே, பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. எனவே தமிழகத்திலும் பள்ளிகளை திறந்து 10, பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் பாடம் நடத்தலாம் என்று அரசு தற்போது முடிவு செய்துள்ளது. இதையடுத்து, கடந்த 6 ம் தேதி முதல் 8ம் தேதி வரை மீண்டும் கருத்து கேட்கப்பட்டது. இந்த கருத்து கேட்பில் தமிழக பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பள்ளிகளை திறப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பள்ளிகளை இப்போதைக்கு திறக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். இந்த கருத்து கேட்பில் பெறப்பட்ட கருத்துகளை 32 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பெற்று, சென்னையில் உள்ள பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த படிவங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை பட்டியலிட்டு பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்மீ–்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் ஆகியோர் ஆய்வு செய்து முதல்வருக்கு தெரிவிக்க உள்ளனர்.
இதற்கான ஆய்வுக் கூட்டம் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதையடுத்து பள்ளிகள் திறப்பதா வேண்டாமா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அல்லது நாளை தனது முடிவுகளை அறிவிப்பார்.