. -->

Now Online

FLASH NEWS


Saturday 16 October 2021

செட்டிநாட்டு மீன் பிரியாணி செய்முறை!

செட்டிநாட்டு மீன் பிரியாணி செய்முறை!


தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 3/4 கிலோ

மீன் - 3/4 கிலோ (பெரிய வகை)

வெங்காயம் - 3

தக்காளி - 3

பச்சை மிளகாய் - 3

இஞ்சி, பூண்டு விழுது - 3 மேசைக்கரண்டி

பட்டை, கிராம்பு, ஏலம், பிரிஞ்சி இலை - தலா 2

தயிர் - ஒன்றரை கப்

மிளகாய் தூள் - 2 + 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 + 1/2 தேக்கரண்டி

வெள்ளை மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி

சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி

சோம்பு தூள் - அரைத் தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி

கெட்டி தேங்காய் பால் - ஒரு கப்

எலுமிச்சை சாறு - ஒரு மேசைக்கரண்டி

எண்ணெய்
புதினா,
மல்லித் தழை
உப்பு.


செய்முறை:

மீனை சுத்தம் செய்து கொள்ளவும்.


மீனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு மேசைக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும். அரிசியை ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். பிரட்டி வைத்த மீனை தவாவில் போட்டு அரை பதமாக பொரித்தெடுத்து வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளிக்கவும். பின் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது, சோம்பு தூள் சேர்த்து வதக்கவும்.

அதனுடன் தக்காளி, மற்றும் தூள் வகைகள் சேர்த்து நன்கு கிளறிவிடவும். பின் மல்லித்தழை, உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக விட்டு, தயிர், தேங்காய் பால், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறிவிட்டு 2 நிமிடம் வேக விடவும். பிறகு பொரித்த மீன் துண்டுகளைப் போட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு, மீனை தனியாக எடுத்து வைக்கவும். குருமாவில் மீன் பொரித்த எண்ணெயை ஊற்றவும். பின் அரிசியைக் களைந்து குருமாவில் போட்டு, பன்னீர் சேர்த்து மூடி போட்டு 15 நிமிடம் சிம்மில் வேக விடவும். பின் நன்கு கிளறிவிட்டு, மீன் துண்டுகளைப் போடவும். மல்லித் தழை தூவி இறக்கவும்.


​​​​​​