கரோனாவுக்கு எதிரான ஃபைசர் மாத்திரைகள், தீவிர கரோனா அறிகுறிகள் தென்படும் நபர்களின் மருத்துவமனை தேவையையும் உயிரிழப்பையும் 89 சதவிகிதம் குறைப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அதன் ஆய்வக பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை தலைமையகமாக கொண்டு இயங்கும் மெர்க் நிறுவனம், ரிட்ஜ்பேக் பயோதெரபியூடிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த கரோனா மாத்திரைகளை காட்டிலும் இது பயனுள்ளதாக இருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இருப்பினும், ஆய்வு முடிவுகளை ஃபைசர் நிறுவனம் இன்னும் முழுமையாக வெளியிடவில்லை.
இதையடுத்து, ஃபைசர் நிறுவனத்தின் பங்குகள் 13 சதவிகிதம் அதிகரித்து 49.47 அமெரிக்க டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இதற்கு நேர்மாறாக, மெர்க் நிறுவனத்தின் பங்குகள் 6 சதவிகிதம் குறைந்து 84.69 அமெரிக்க டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது.
ஃபைசர் நிறுவனத்தின் மாத்திரை, ரிடோனாவிர் என்ற பழைய வைரஸ் தடுப்பு மாத்திரையுடன் கலந்து வழங்கப்படுகிறது. அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி பெறுவதற்காக இதன் இடைக்கால ஆய்வு முடிவுகள் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் சமர்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாக்ஸ்லோவிட் என்ற பெயரில் இந்த மாத்திரைகள் விற்கப்படவுள்ளது. மூன்று மாத்திரைகளின் கலப்பான பாக்ஸ்லோவிட்டை ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்து கொள்ள வேண்டும்.
DINAMANI View source