தமிழ் மாதமான சித்திரை மாதத்தின் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை அட்சய திருதியை என்று கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் உள்ளது. இந்த ஆண்டு அட்சய திருதியை இன்று அதிகாலை 4.17 மணிக்கு தொடங்கி 11-ந்தேதி மதியம் 2.50 மணிக்கு முடிவடைகிறது.
இந்த நாளில் வாங்கப்படும் எந்த பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவே இந்த நாளில் பொதுமக்கள் தங்கத்தை வாங்குவதற்கு விரும்புகின்றனர்.இந்த நிலையில் அட்சய திருதியையொட்டி இன்று சென்னையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து 53 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 660 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு அதிகரித்து 88 ரூபாய் 70 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை 2 முறை உயர்வு
அட்சய திருதியையொட்டி ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 2 முறை உயர்ந்துள்ளது. காலையில் சவரனுக்கு ₹360 உயர்ந்த நிலையில், தற்போது மீண்டும் ₹360 அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹720 உயர்ந்து ₹53,640க்கும், கிராமுக்கு ₹90 உயர்ந்து ₹6,705க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1.30 உயர்ந்து ₹90க்கும், கிலோவிற்கு ₹1,300 உயர்ந்து ₹90,000க்கும் விற்கப்படுகிறது.