திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் உறுதியளித்தபடி, தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி தமிழ்நாட்டின் நிதி நிலையையும் தமிழ்நாட்டு மக்களின் எதிர்காலத்தையும் ஒருங்கே காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
12.12.2022-ல் நடைபெற்ற CPS ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவின்படி சென்னையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்க,
11.02.2023-ல் மாநில அளவிலான CPS ஒழிப்பு மாநாடு
நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டு CPM, CPI, VCK, PMK, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளதோடு மற்ற கட்சித் தலைவர்களையும் தொடர்ந்து சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர் CPS ஒழிப்பு இயக்கத்தினர்.
இந்நிலையில், ஜாக்டோ-ஜியோ சார்பாக 05.01.2023-ல் மாவட்டத் தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்ற சூழலில் இன்று (08.01.2023) மதுரையில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக் குழுக் கூட்டத்தில்,
12.02.2023 : மாவட்டத் தலைநகரங்களில் போராட்ட ஆயத்த மாநாடு
05.03.2023 : மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதம்
24.03.2023 : வட்டார & மாவட்டத் தலைநகரங்களில் 20000 Km. நீள மனிதச் சங்கிலிப் போராட்டம்
உள்ளிட்ட மூன்றுகட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட முடிவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், ஜாக்டோ-ஜியோ மீது திமுக ஆட்சிக்கு வந்ததால் தான் போராடவில்லை என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு,
"20 மாதங்களாக திமுக அரசு செய்து கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தோம்; ஆனால், அதிமுக ஆட்சியில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட EL Surrender, Incentive உள்ளிட்ட உரிமைகளையும் திமுக முழுமையாக நிறுத்திவிட்டது; முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள் செய்வதாக உறுதியளித்த பழைய ஓய்வூதியத் திட்டம், இடைநிலை & முதுநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு, சத்துணவு & ஊராட்சி பணியாளர்களுக்கான காலமுறை ஊதியம் உள்ளிட்ட ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கைகளைச் செயல்படுத்தவிடாது அதிகாரிகள் தடுத்து வருவதோடே வருங்காலத்தில் அரசுப்பணியே கிடையாது என்ற நோக்கில் தமிழ்நாட்டு அரசை கார்ப்ரேட் அரசாக மாற்றி வருகின்றனர். இப்போராட்டங்களில் அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தடுத்த போராட்ட அறிவிப்புகளையும் ஜாக்டோ-ஜியோ அறிவிக்கும் என்று இன்றைய கூட்டத்திற்குத் தலைமையேற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு.பொன் செல்வராஜ், திரு.மு.அன்பரசு, திரு.ச.மயில் உள்ளிட்டோர் கூட்டாக அறிவித்தனர்.