ஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள், மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவரிடம் அதிக விறகும் மேலும் அவர் அதிக களைப்படையாமலும் இருந்தார்.
மற்றொருவருக்கோ பயங்கர ஆச்சர்யம்!! “நம்மை போல தானே அவனும், அவனால் மட்டும் இப்படி இது சாத்தியமானது” என்று ஆர்வம் தாங்காமல் அவனிடமே கேட்டு விட்டான்.
நண்பன் அவனிடம் கேட்டான், “இந்த விறகுகளுக்காக நீ என்ன செய்தாய்”
அவன் சொன்னான், “இடைவிடாமல் வெட்டி கொண்டே இருந்தேன்”
“சிறிதும் ஓய்வு இல்லாமலா” என்று கேட்டான் நண்பன். “ஆம் அதிக விறகுகள் பெற வேண்டுமே”. “ஆனால், நீ கொஞ்சமும் களைப்படையாமல் இருப்பது எப்படி” என்று கேட்டான்.
“நான் இடையில் அடிக்கடி ஓய்வு எடுத்து கொள்வேன்” என்று சொன்னான் நண்பன்.
மறுநாள் அவனும் அதே போல் ஓய்வு எடுத்து எடுத்து மரம் வெட்டினான். இருப்பினும் அவனால் நண்பன் அளவுக்கு மரம் வெட்டமுடியவில்லை, மறுநாள் மரம் வெட்டும் போது ஒளிந்திருந்து பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டு வீடு திரும்பினான்.
மறுநாள் மரம் வெட்ட பிரிந்து சென்ற பின், அவன் நண்பனை பின் தொடர்ந்து சென்றான், நண்பனும் அரைமணி நேரம் மரம் வெட்டி விட்டு ஓய்வாக அமர்ந்தான். ஆனால், அவன் ஓய்வு நேரத்தில் அவனது கோடாலியை தீட்டி கொண்டிருந்தான்.
“நம் ஓய்வு கூட வெற்றியை தீர்மானிப்பதாக இருக்க வேண்டும்”